Last Updated : 06 May, 2024 08:25 PM

 

Published : 06 May 2024 08:25 PM
Last Updated : 06 May 2024 08:25 PM

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் விசாரணை: நெல்லை மாவட்ட காங். தலைவர் மரண வழக்கில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து 8 தனிப்படைகளை அமைத்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 2-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உவரி காவல் நிலையத்தில் இவரது மகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கே.பி.கே.ஜெயக்குமார் சடலமாகக் கிடந்தார். அவர் எழுதிய மரண வாக்குமூலம், மருமகனுக்கு எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

8 தனிப்படைகள் அமைப்பு: இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்கள், உறவினர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது . இவர்கள் 15 தினங்களுக்குள் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் விசாரணை: இந்நிலையில், பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டுக்கு தனிப்படை போலீஸார் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர். தனுஷ்கோடி ஆதித்தன் விபத்தில் சிக்கி, பாதிக்கப்பட்டவர் என்பதால் காவல் நிலையத்துக்கு ஆஜராக முடியாத நிலையில் உள்ளதால் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பணகுடி ஆய்வாளர் ஆனி குமார் தலைமையிலான போலீஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். தனுஷ்கோடி ஆதித்தன், ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் குறித்தும், இதற்கு உதவியாக இருந்த தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தெரிந்த நபரான பாலபாக்யா நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி, அதன் விவரங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்து, இருவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டதாக் கூறப்படுகிறது.

செல்போன்கள் மாயம்: ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் இறந்து கிடந்த தோட்டத்துக்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீஸார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை சிக்கவில்லை. அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை கண்டறிந்தால் அதில் உள்ள அழைப்பு விவரங்களைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினால் மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் தனிப்படை போலீஸார் கருதுகின்றனர். எனவே, செல்போன்களை கண்டறிய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சிசிடிவி பதிவுகள் ஆய்வு... - மேலும், அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்துக்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணங்களிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு அல்லது 3-ம் தேதி அதிகாலை இறந்திருக்கலாம் என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் 2-ம் தேதி அவர் மாலையில் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இதற்காக திசையன்விளை, உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளிகள், குடியிருப்புகளில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திசையன்விளை பஜார் பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் திசையன்விளை சந்திப்பு பகுதியில் இருந்து அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காரை ஜெயக்குமாரே ஓட்டிச் சென்றதும், அவரை தவிர காரில் வேறு யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரைசுத்துபுதூர் கிராமத்துக்குச் சென்று ஜெயக்குமார் குடும்பத்துகுகு ஆறுதல் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக எந்தவித அனுமானத்திலும், எந்த அரைகுறை விசயத்தையும் வைத்துக்கொண்டு அரசியலுக்காக எந்த கருத்தையும் கூற முடியாது. ஆனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. அவரது மரண வாக்குமூலம் கடிதத்தில் பெயர் கூறப்பட்டுள்ளவர்களுடன் ஜெயக்குமாருக்கு எப்படிப்பட்ட நட்பு இருந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.

இந்த வழக்கு காவல் துறைக்கு சவாலானதாக உள்ளது. மிகவும் கொடூரமான முறையில் கெலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை அவர்கள்தான் கண்டறிய வேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். விரைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் தகவல் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை மிகவும் தீவிரமாக விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள். குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

ஜெயக்குமார் எனக்கு மிகச் சிறந்த நண்பர். என்னிடம் அளவாகத்தான் பேசுவார். தனக்கு துயரங்கள் இருந்ததாகவோ, சிரமங்கள் இருந்ததாகவோ என்னிடம் பேசியதில்லை. யாரைப் பற்றியும் குறை சொன்னதில்லை. அவருக்கு எழுத்தாற்றல் அதிகம். அவரது கடிதத்தை வாட்ஸப்பில் பார்த்தேன். அது அவர் எழுதியதாகத்தான் இருக்கலாம். அதை காவல் துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x