Published on : 19 Mar 2024 14:12 pm
சேலத்தில் பிரதமர் மோடி பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்து திறந்த வேன் மூலம் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சரத்குமார், குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ராமதாஸுக்கு கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சால்வை அணிவித்தனர்.