Published on : 09 May 2020 21:53 pm

பேசும் படங்கள்... (09.05.2020)

Published on : 09 May 2020 21:53 pm

1 / 26

போக்கிடம் நோக்கி ஏக்கப் பார்வையோடு காத்திருக்கும் வெளி மாநிலத்தவர்கள்: சென்னை வாழ் வெளி மாநிலத்தவர்கள் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகில் கூட்டமாகத் திரண்டு எதாவது ரயில் சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்குப் போகுமா என்கிற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். மனதில் புழுக்கம், தலைக்குமேல் சூரிய வெப்பம். ஓய்ந்து தங்குவதற்கும் சாய்ந்து ஒதுங்குவதற்கும் போதுமான நிழல் இல்லாத நிலையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துள்ளனர். படம்.க.ஸ்ரீபரத்

2 / 26
3 / 26

புன்னகை மறந்த வெள்ளி நகைத் தொழிலாளர்கள்: சேலத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வெள்ளி நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலையின்றித் தவித்து வருகின்றனர். இதையடுத்து சேலம் சிவதாபுரம் பகுதியில் வசித்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்துக்குச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டியும் இன்று (9.5.2020) சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் உரிய ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்

4 / 26

டாஸ்மாக் கடைகளுக்கு சீல்: ஊரடங்கு உத்தரவு விலக்கப்படும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடையின் பொறுப்பாளர்கள் கடைகளை மூடிவிட்டுப் பாதுகாப்பிற்காக சீல் வைத்துக்கொண்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்

5 / 26

கோவையில் கொளுத்தும் வெயிலில்: கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வேலை பார்த்துவந்த வட மாநிலத் தொழிலாளர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலமான உத்திரபிரதேசம் செல்ல கோவை ரயில்வே நிலையத்திற்கு வந்தவர்கள், கொளுத்தும் வெயிலில் நிற்கமுடியாமல் தங்கள் இடங்களில் தங்களுடைய பெட்டிகளை வைத்து விட்டு சுவர்களின் நிழலுக்கு சென்றுவிட்டனர். .படம் :ஜெ .மனோகரன்

6 / 26

மாணவர்கள் தப்பியோட்டம்... செஞ்சிலுவை சங்கம் மீட்பு: மதுரையில் தனியார் காப்பகத்தில் சரியாக உணவு வழங்காமல் கெட்டுப்போன உணவை வழங்கியதோடு, வேலை வாங்கியதாகவும் கூறி சிறுவர்கள் இருவர் அங்கிருந்து தப்பிய நிலையில், அவர்களைப் பத்திரமாக செஞ்சிலுவை சங்கம் அமைப்பினர் மீட்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாவட்ட சார்பு நீதிபதி தீபா மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் நேற்று அந்த தனியார் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7 / 26

கிளாம்பாக்கத்தில் புதிய ஏற்பாடு: தென் மாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகளை இறக்கவும் அங்கிருந்து கோயம்பேட்டுக்குப் பதிலாகச் செயல்பட உள்ள திருமழிசை தற்காலிகச் சந்தைக்கு ஏற்றி எடுத்து செல்லவும் வசதியாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. படம்: எம்.முத்து கணேஷ்

8 / 26

பாண்டியில் பறக்கும் கிளி! புதுச்சேரி - செஞ்சி சாலையில்... அழகிய கிளி ஒன்று வாயில் கூடையைக் கவ்வியபடி பறந்து சாலையை கடப்பது போல் சாலையோரம் உள்ள கடை ஒன்றில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியம். படம்; எம்.சாம்ராஜ்.

9 / 26

சாலை நடுவே சாண வறட்டி! இது நிஜமாகவே தேசிய நெடுஞ்சாலை தாங்க. ஊரடங்கு உத்தரவு, கரோனா பீதி, நோய் பரவும் அபாயம்... என பெரும்பாலான மக்கள் வீட்டிலேய முடங்கிக் கிடக்கின்றனர்.அதனால் வெறிச்சோடிக் கிடக்கும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள நடுக்கட்டையில் சாலைப் பயணம் செய்யத்தான் பயன்பட வில்லை. இதற்காகவாவது பயன்படட்டும் என்பதுபோல் சாண வறட்டியைத் தட்டிக் காய வைத்துள்ளனர். இடம். மூலக்குளம், புதுச்சேரி. படம்: எம்.சாம்ராஜ்

10 / 26

மல்லிகை விற்பனை மணக்கவில்லை! கரோனாவால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வெளியே சென்றால் காவல் துறையினர் அவசரத் தேவைக்கு மட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் பூ வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது .அதிக விளைச்சல் இருந்தும் விலை போகாத நிலை உள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,ராதாபுரம்,திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட பூக்கள் விளைச்சல் மிக அதிகம். தோட்டங்களில் பறிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் மல்லிகைப் பூக்களை வாங்க கூட ஆட்கள் இல்லாததால் பூ வியாபாரிகள் பைகளில் கட்டி வீதி வீதியாக விற்க பிளாஸ்டிக் பைகளில் தொங்க வைத்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கிலோ ஆயிரம் ரூபாய் தாண்டி விற்ற குண்டு மல்லியின் விலை இப்போது கிலோ அறுபதுதான். படம்:.எம்.சாம்ராஜ்

11 / 26

மீண்டும் தொடங்கிய கட்டிடப் பணிகள்! 144 தடை உத்தரவைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி நிறுத்திவைக்கப்பட்ட மதுரை - ஸ்மார்ட் சிட்டி பணிகள் இன்று தொடங்கின. இடம்: மதுரை - பெரியார் பஸ் நிலையம். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

12 / 26

துபாயில் இருந்து சென்னை வந்த 356 பேருக்குத் தனிமைக் கண்காணிப்பு: துபாயில் இருந்து இரு விமானங்களில் 356 பேர் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தனர். அவர்களுக்குச் சென்னை விமான நிலையத்தில் கரோனா நோய்த் தொற்று உள்ளதா என சோதிக்கப்பட்டன. அவர்கள் அத்தனை பேரும் 14 நாட்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

13 / 26
14 / 26

மெய்மறந்த குடிமகன்! நீதிமன்ற உத்தரவுப்படி மதுபான கடைகள் மூடப்பட்டது தெரியாமல்.... மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஏக்கத்துடன் காத்திருக்கும் பெரியவர் . அவரவர்க்கு ஒரு கவலை. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

15 / 26

வாழ்வாதாரத்தை இழந்து... வேலைவாய்ப்பும் இன்றி... சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர் 3 பேர் தங்களுக்கு கிடைத்த உணவுப்ப் பொருளை தூக்கிச் செல்கின்றனர். படம்: க.ஸ்ரீபரத்

16 / 26

சென்னையில் ஆங்காங்கே சிறு சிறு குழுக்கலாக கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு... கரோனா ஊரடங்கு காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் வட மாநிலத் தொழிலாளர்கள். நேற்று சென்னை - பாரிமுனைப் பகுதியில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த சில பொருட்களை... தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு தூக்கிச் செல்கின்றனர். படம்: க.ஸ்ரீபரத்

17 / 26

ஊரடங்கு தளர்வும்...தளராத நம்பிக்கையும்! பஞ்சபூத தத்துவத்தில் மண்பானை குடிநீர் நில மற்றும் நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும், மண் பானை குடிநீர் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. இதனால், கோடை காலத்தில் மண் பானை பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், இதன் தேவையைக் கருதி மண்பாண்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடிநீர் பானைகளைத் தயார் செய்து, விற்பனை செய்ய காத்திருந்தனர். ஆனால், கரோனா தடுப்பு ஊரடங்கால் பானை விற்பனை முடங்கிப் போயிவிட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வால் யாராவது பானை வாங்க வருவார்களா என்ற தளராத நம்பிக்கையுடன் விற்பனையாகாத பனைகளுடன் அயோத்தியாப்பட்டிணத்தில் காத்திருக்கும் மூதாட்டி ஒருவர். படம் : எஸ். குருபிரசாத்

18 / 26

தயாராகிறது கிளாம்பாக்கம்: தென் மாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகளை இறக்கவும், அங்கிருந்து திருமழிசை தற்காலிகச் சந்தைக்கு ஏற்றி எடுத்து செல்லவும் வசதியாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. படம்: எம்.முத்து கணேஷ்

19 / 26

வட மாநில தொழிலாளர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது குழந்தைகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் கொடுக்கும் தாய். படம் : ஜெ .மனோகரன்

20 / 26

மார்கெட் படுத்துடுச்சி: கரோனா வைரஸ் தடுப்புக்காக - அமலில் இருந்த ஊரடங்கு கடந்த 4-ம் தேதி முதல் தளர்த்தப்பட்ட நிலையில்... எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் கோவை டி .கே .எம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க மக்கள் வராததால் தன் கடையில் நன்றாக குறட்டைவிட்டு தூங்கும் வியாபாரி ஒருவர். படம் : ஜெ .மனோகரன்

21 / 26

கோவையில் வேலை பார்த்து வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்துக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலம் உணவு வழங்கபட்டது. படங்கள் : ஜெ .மனோகரன் .

22 / 26
23 / 26

ஊரடங்கு அமலில் இருந்த 45 நாட்களுக்குப் பிறகு, சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் - நேற்று திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனப் போக்குவரத்து இருந்ததால் சாலை முழுக்க மணற்புழுதி புகைமண்டலமாக எழுந்தது. படம் ; மு.லெட்சுமி அருண்

24 / 26

கரோனாவை விரட்டலாம் வாங்க: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில்... நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்ள வந்த உறவினர்களுக்கு சமூக விலகல் மற்றும் கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கும் மருத்துவத் துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் . படம் : மு.லெட்சுமி அருண்

25 / 26

சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக - சென்னை செட்ரல் ரயில் நிலையத்து வாசலில் சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள். வாழ்வாதாரத்தை இழந்து புறப்பட்ட இடத்துக்கே செல்ல -வேண்டியிருக்கே என்கிற கவலை சுமந்து நிற்கின்ற அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வது? -படம் : க.ஸ்ரீபரத்

26 / 26

தண்ணீர்... தண்ணீர்: கோடை வெய்யில் கொளுத்துகிறது.... எங்கும் வெப்பத்தின் பரப்புரை சூடு.... போதாக்குறைக்கு கோடை மழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் மொத்தம் 23 அடிகள் ஆழம் கொண்டிருந்தாலும் - இப்போது வறண்டு போய் 2 அடி தண்ணீரை மட்டுமே கொண்டிருக்கும் - திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக திகழும் - ஆத்தூர் நீர்த்தேக்கம். படம்.பு.க.பிரவீன்

Recently Added

More From This Category

x