

மாட்ரிட்: ஸ்பெயினுக்குள் ஊடுருவிய அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் சொந்த நாடான மொராக்கோவுக்கு திரும்பி உள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோவும் அண்டை நாடுகளாக உள்ளன. முஸ்லிம் நாடான மொராக்கோவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மொராக்கோ மக்கள், வளமான ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் மொராக்கோவை சேர்ந்த சுமார் 9,000 பேர் ஸ்பெயினுக்குள் நுழைந்தனர். அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த சூழலில் மொராக்கோவை சேர்ந்த சுமார் 70,000 பேர் நேற்று முன்தினம் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா நகரில் ஊடுருவினர். இதைத் தொடர்ந்து ஸ்பெயின் அரசு, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சியூட்டா நகருக்கு அனுப்பியது. ஒட்டுமொத்த நகரமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே சியூட்டாவுக்குள் நுழைந்த அகதிகள் உணவு தேடி அலைந்தனர். நகரில் உள்ள பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டன. அங்குள்ள வீடுகளை சூறையாடவும் அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் அகதிகளால் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முடியவில்லை.
67 பேர் உயிரிழப்பு
ஒரு நாள் முழுவதும் உணவு கிடைக்காத நிலையில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட அகதிகள் மீண்டும் கடலில் நீந்தி மொராக்கோவுக்கு திரும்பி சென்று விட்டனர். மீதமுள்ள அகதிகளை ராணுவ வீரர்கள் பிடித்து உள்ளனர். அவர்களும் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
இதனிடையே, 67 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் கரையேறி உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்பெயின் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “பல்வேறு சவால்களுக்கு இடையில் அகதிகள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கண்டுள்ளோம். பெரும்பாலான அகதிகள் மொராக்கோவுக்கு திரும்பி உள்ளனர். மீதமுள்ள அகதிகள் படகுகள் வாயிலாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.