Published : 28 Sep 2017 10:43 AM
Last Updated : 28 Sep 2017 10:43 AM
ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிரஸ்னோதார் நகரில் சுமார் 7.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்நகரைச் சேர்ந்த 30 பேர் மர்மமான முறையில் காணாமல் போயினர். இந்நிலையில், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அங்கு கேட்பாரற்று கிடந்த ஒரு செல்போனை போலீஸில் ஒப்படைத்துள்ளனர். அந்த செல்போனை ஆராய்ந்ததில், ஒருவர் மனித மாமிசத்தை சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
அதேநேரம், விமான பயிற்சி மையத்துக்கு அருகே, 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைக் கைப்பற்றினர்.
இதனிடையே, தொழில்நுட்ப உதவியுடன் அந்த செல்போனின் உரிமையாளர் டிமிட்ரி பக்ஷீவ் என்பதும் விமான பயிற்சி மையத்துக்கு அருகே வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் அவரது மனைவி நடாலியா பக்ஷீவாவையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் 30 பேரைக் கொன்று அவர்களது மாமிசத்தை இருவரும் சாப்பிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான பயிற்சி கல்லூரியில் இருவரும் சமையல் வேலை செய்துள்ளனர். அதனால் யாருக்கும் தெரியாமல் நர மாமிசத்தை அவர்களுக்கும் கலந்து கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மனிதர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவர்களது தோலை உரித்துள்ளனர் (உயிருடன் இருக்கும்போதே). அதன் பிறகு உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள பாகங்களை குளிரூட்டியிலும், உப்பு கரைசலிலும் ஊற வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த தம்பதியின் வீட்டின் நடத்திய சோதனையில், மாமிசங்களை உப்பில் ஊற வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உறைய வைத்திருந்த மாமிசங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT