Published : 10 Dec 2016 03:41 PM
Last Updated : 10 Dec 2016 03:41 PM
எச்1பி விசா வைத்திருப்பவர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்து அமெரிக்கர்களை வேலையை விட்டு அனுப்பும் நடைமுறையை அனுமதிக்கப்போவதில்லை என்று அதிபர் பொறுப்பேற்கும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டிஸ்னி வேர்ல்ட் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் எச்1பி விசா வைத்திருப்பவர்களை அமெரிக்கப் பணியாளர்களுக்கு மாற்றாக தேர்வு செய்வதைக் குறிப்பிட்டு டொனால்டு ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அயோவாவில் டொனால்டு ட்ரம்ப் பேசுகையில், “ஒவ்வொரு அமெரிக்கர் வாழ்வையும் பாதுகாக்க போராடுவோம். தேர்தல் பிரச்சாரத்தின் போது அயல்நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு வலுக்கட்டாயமாக அமெரிக்கப் பணியாளர்களைப் பயன்படுத்தி பிற்பாடு அமெரிக்கர்களை வீட்டுக்கு அனுப்பிய சிலருடன் நான் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் இது நடக்க அனுமதியோம்.
இதை உங்களால் நம்ப முடிகிறதா? தங்கள் இடத்தில் பணியாற்ற அயல்நாட்டுக்காரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வரை அமெரிக்கர்களுக்கு ஊதியம் கிடைக்காது என்பதை நீங்கள் நம்ப முடிகிறதா? இது நிச்சயம் தரக்குறைவாக்கும் செயல்தான்” என்றார்.
டிஸ்னி வேர்ல்ட் மற்றும் இரண்டு அவுட் சோர்சிங் நிறுவனத்தின் மீது முன்னாள் அமெரிக்க ஊழியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதாவது அமெரிக்க ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக எச்1பி விசாதாரர்கள், பெரும்பாலும் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்க தாங்களை ‘சதி’ செய்தனர் என்று தங்கள் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 2015-ல் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் நிறுவனம் 250 அமெரிக்க பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹெச்.சி.எல். மற்றும் காக்னிசண்ட் ஐடி நிறுவனங்கள் வழக்கில் சிக்கியுள்ளன.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “சட்டவிரோத குடியேற்றத்தை முடித்து வைப்பேன். நம் நாட்டு இளைஞர்களை நச்சுமயமாக்கும் போதைமருந்துகள் நம் நாட்டினுள் நுழைவதை தடுப்பேன். நம் நாட்டின் பெரிய, இளமையான, நேசமிக்க இளைஞர்கள் போதை மருந்தினால் சீரழிவதை நிச்சயம் தடுப்பேன். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT