Published : 27 Dec 2016 12:45 PM
Last Updated : 27 Dec 2016 12:45 PM
மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் டொனால்டு ட்ரம்பை தோற்கடித்திருப்பேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துப் பேசிய ஒபாமா, ''அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் (இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அமெரிக்க அதிபர் பதவியில் தொடர முடியாது), நிச்சயம் அமெரிக்க மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பேன் என்று நினைக்கிறேன்.
என்னை எதிர்ப்பவர்கள் உட்பட நாடு முழுக்க உள்ள அனைத்து மக்களும் என்னுடைய சிந்தனை, பார்வை மற்றும் செயல்பாடுகளைச் சரியானது என்றே தொடர்ந்து கூறிவந்தனர்.
குடியரசுக் கட்சியினரால் பிரிவினையைத் தூண்டுவதில் மட்டுமே மும்முரம் காட்ட முடிந்தது. ட்ரம்ப்பின் வெற்றியானது சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் திறந்த மனத்துடன் அணுகும் ஒரே அமெரிக்கா (ஒன்றிணைந்த அமெரிக்கா) என்ற கனவை பொய்த்துப் போனதாக ஆக்கிவிடாது.
சாதாரண வாழ்க்கை வாழ ஆசை
என்னுடைய இளைய மகளின் பள்ளி வாழ்க்கை முடியும்வரை நான் வாஷிங்டனிலேயே இருப்பேன். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் நான் கடமைகளையும் பொறுப்புகளையும் கொண்ட குடிமகன் என்பதால், முக்கியப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (70) வெற்றி பெற்றார். எதிர்பாராத இந்த வெற்றியால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன.
ஒருவர் அமெரிக்க அதிபராக இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலையில் ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT