Published : 22 Dec 2022 08:07 AM
Last Updated : 22 Dec 2022 08:07 AM

சீனா உட்பட பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை - மத்திய அரசின் நோய் தடுப்பு துறை தகவல்

புதுடெல்லி: ‘‘சீனா உட்பட பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பயப்பட தேவையில்லை. இங்கு இயற்கையான தொற்று மற்றும் தடுப்பூசி கலந்து நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’’ என்று மத்திய அரசின் நோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அதன்பின் படிப்படியாக பல நாடுகளில் குறைந்தது. ஆனால், சீனாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்தது. தற்போது சீனா, ஜப்பான், கொரியா உட்பட பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா உட்படபல முக்கிய நகரங்களில் தொற்றுஅதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் முகக் கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதனால் இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவிட் - 19 நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா நேற்று கூறியதாவது:

இந்தியாவில் இயல்பான தொற்று மற்றும் தடுப்பூசி என 2 வகையில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே, சீனா உட்பட பல நாடுகளில் அதிகரித்துள்ள கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை. சீனாவில் ‘ஜீரோ கோவிட்’ என்ற கொள்கையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன. அதனால், அந்நாட்டில் இயற்கையான நோய் தொற்று,அதன்மூலம் ஏற்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அத்துடன் சீனாவில் வழங்கப்படும் தடுப்பூசி எந்தளவுக்கு கரோனா தொற்றை குணமாக்குகிறது என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. அத்துடன், சீனாவில் பெரும்பாலான முதியோருக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவும் கரோனா தொற்றால் பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளன.

எனவே, இந்தியாவில் பதற்றம் அடைய தேவையில்லை. அதேவேளையில் முன்னெச்சரிக்கை யாக இருப்பது புத்திசாலித்தன மானது. மேலும், இந்த நேரத்தில் கரோனா வைரஸின் திரிபுகளை தொடர்ந்து கண்காணித்து, புதிதாக தொற்றால் பாதிக்கப்பட் டோரை கண்டறிவது முக்கியம்.குறிப்பாக விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளுக்கு கோவிட் அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி கரோனா திரிபுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தற்போது தினசரி பாசிட்டிவ் 100 முதல் 110 என்ற அளவிலேயே உள்ளது. கரோனா தொற்று பரவிய பிறகு இந்தியா 3 அலைகளை சந்தித்து விட்டது. மூன்றாவது அலையில் ஒமிக்ரான் வகை வைரஸ்தான் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், ஒமிக்ரானின் உருமாற்றம் பெற்ற வைரஸ்கள்தான் தற்போது உலகின்சில நாடுகளில் அதிகமாக பரவிஉள்ளது. மேலும், ஒமிக்ரானின்உருமாற்றம் பெற்ற 75 வைரஸ்கள் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே, இந்த நிலை உடனடியாகமாறிவிடும் என்று நினைப்பதற்கில்லை. அதேநேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இவ்வாறு கோவிட் - 19 நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x