Published : 17 Dec 2016 03:02 PM
Last Updated : 17 Dec 2016 03:02 PM
சிரிய அதிபர் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளிகளான ரஷ்யாவும், ஈரானும் அலெப்போவின் உள்நாட்டுப் போருக்கு ஏராளமான மக்களை பலி கொடுத்த ரத்தம் படிந்த கைகளைக் கொண்டுள்ளனர் என அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் குறித்து கூறும்போது, "சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளிகளான ரஷ்யாவும், ஈரானும் அங்கு நிலவும் உண்மையை மறைக்க முயற்சி செய்கின்றன.
இவர்கள் தொடர்ந்து உலக நாடுகளை முட்டாளாக்க முடியாது. போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்பாவி மக்கள் வெளியே செல்ல முடியாத வண்ணம் ஒர் ஒழுங்கான வெளியேற்ற முறையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். ஏராளமான அப்பாவி மக்களை அங்கு நடக்கும் சண்டைக்கு பலி கொடுத்து ரத்தம் படிந்த கைகளை அவர்கள் (சிரிய அரசு, ரஷ்யா, ஈரான்) கொண்டுள்ளனர். அவர்களின் இந்தக் குற்றத்தை உலக நாடுகள் மறக்காது.
இன்னும் போர் நடைபெறும் இடங்களில் அப்பாவி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அங்கு தொடர்ந்து மனித நேய செயற்பாட்டாளர்களும், மருத்துவ பணியாளர்களும் தாக்கப்படுவதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து அமெரிக்கா ஏராளமான மனித நேய செயற்பாட்டாளர்களை அனுப்பி சிரிய மக்களுக்கு உதவி செய்து வருகிறது. சர்வதேச சட்டத்துக்கு எதிரான அனைத்து கொடூரமான வன்முறைகளும் சிரியாவில் நடக்கிறது" என்று கூறினார்.
முன்னதாக சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வசப்படுத்தியுள்ளன.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் சிரிய அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஈரானும் உதவி புரிய, சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT