Published : 31 Oct 2022 04:04 PM
Last Updated : 31 Oct 2022 04:04 PM

ஈரானில் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் இளம் சமையல் கலை நிபுணர் மரணம்; பதற்றம் அதிகரிப்பு

மெஹர்ஷாத் ஷாஹிதி

தெஹ்ரான்: ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி, பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், 19 வயது ஈரானின் பிரபல சமையல் கலை நிபுணரான மெஹர்ஷாத் ஷாஹிதி ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாராடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது மெஹர்ஷாத் ஷாஹிதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை ஈரான் பாதுகாப்புப் படையினர் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த மெஹர்ஷாத் ஷாஹிதி உயிரிழந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெஹர்ஷாத் ஷாஹிதி மரணம் குறித்து அமெரிக்கா - ஈரான் எழுத்தாளர் நினா அன்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமைவாய்ந்த இளம் சமையல் கலை நிபுணர், ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டிருக்கிறார். ஷாஹிதி கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். நாங்கள் இதனை மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம்” என்றார்.

மெஹர்ஷாத் ஷாஹிதி உறவினர் கூறும்போது, “மெஹர்ஷாத் ஷாஹிதி 19 வயது இளைஞர். ஈரானில் கொல்லப்பட்டிருக்கிறார். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். வண்டியிலிருந்து கீழே இறக்கப்பட்டு அவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். பின்னர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது. ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x