Published : 31 Oct 2022 03:14 PM
Last Updated : 31 Oct 2022 03:14 PM

“ரோதங் பாஸ் எனும் இடத்தில் அதிசய அனுபவத்தை உணர்ந்த தருணம்” - அசோக் செல்வன் பகிர்வு

"சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்" என்று படப்பிடிப்பு அனுபவத்தை நடிகர் அசோக் செல்வன் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்

இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இப்படத்தில் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நவம்பர் 4-ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அசோக் செல்வன், “நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிட கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பட குழுவினரும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது.. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம்.

கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10 ,15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து கொள்கிறோம். உணர்வு மேலிட, இயக்குநரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன.

அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது’ என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்'' என்றார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ரா.கார்த்திக் பேசுகையில், ''நித்தம் ஒரு வானம் படத்தின் கதையை எழுதி, தற்போது படம் நிறைவடைந்திருக்கும் வரை ஏழு ஆண்டுகளாகி இருக்கிறது. ‘வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் காத்திரு’ என்பார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றது. எந்த நோக்கத்தில் இந்த படத்தின் கதையை எழுதினேனோ, அதனை முழுவதுமாக, நேர்த்தியாக படைப்பாக உருவாக்கி இருக்கிறேன்.

நான் படைப்பாளனாக கதையை சொல்லும்போது அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். நம்மை சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கும். அதனை உணர்வுபூர்வமாக திரையில் சொல்ல வேண்டும் என நினைப்பேன். அதனை சொல்லி இருக்கிறேன். இந்த படத்தை பார்த்த பிறகு உங்களுடைய மனதில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நேர் நிலையான தாக்கம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன். படம் பார்க்கும் முன் உங்களுடைய மனதில் அழுத்தங்கள் இருந்தாலும், நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்த படம் சிறிய அளவிலான மன நிம்மதியையும், ஒரு புன்சிரிப்பையும் உங்களிடத்தில் உண்டாக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

நேர்மையாக ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தை பார்வையிட்ட தணிக்கை துறை அதிகாரிகள் எந்த ஒரு வெட்டும் இல்லாமல் யூ சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள். இந்தத் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம்பெறவில்லை. அதனால் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தை குடும்பத்துடன் ஏன் பார்க்க வேண்டும்? என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் முழுவதும் மக்கள் ‘எதிர் நிலையான எண்ணங்களை வெல்வது எப்படி?’ என்பதைத்தான் அதிகளவில் தேடி இருக்கிறார்கள். நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையிலான எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதில்லை. முக கவசம் அணிந்து, அணிந்து அசலான முகத்தை தொலைத்து விட்டோம். இத்தகைய நிலையில் யாரேனும் நம்மை உத்வேகம் படுத்த வேண்டும்... நம் தோளில் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்... என்ற ஏக்கம், ஆதங்கம் மனதிற்குள் இருக்கிறது. ‌ பணப்பிரச்சனை, மனப்பிரச்சனை இதற்கு இடையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வாழ்க்கை மீது ஒரு சதவீத அளவிலாவது நேர் நிலையான எண்ணத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x