Published : 29 Oct 2022 10:24 AM
Last Updated : 29 Oct 2022 10:24 AM

'ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது' - ட்ரம்ப் புகழாரம்

ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ட்விட்டர் இப்போது ஒரு தான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது" என்று கூறியுள்ளார். முன்னதாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான் வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் தற்போது ட்விட்டர் கைமாறியதை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மஸ்கின் சூசக குறிப்பும், ட்ரம்பின் புகழாரமும் அமெரிக்காவில் கவனம் பெற்றுள்ளது.

ட்ரம்ப் மீது தடை: உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள், வசைகளை உள்ளடக்கிய ட்வீட்களைப் போலியானவை என்று அம்பலப்படுத்துதல் மற்றும் அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தணிக்கை நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டது. இந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டுள்ளார்.

ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக இல்லாத எந்த ஒரு கருத்துக்கும் ட்விட்டரில் இடமளிக்கப்பட வேண்டும் என்கிறார் மஸ்க். கருத்து/பேச்சு சுதந்திரத்தின் முற்றுமுழுதான ஆதரவாளர் என்று தன்னை முன்வைக்கிறார். ட்விட்டரைக் கைப்பற்றிய பிறகு, அதில் பிரதானமாக மூன்று மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக ஏற்கெனவே சொல்லி வந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்துரிமை பேணப்படவில்லை என்பது மஸ்க்கின் முதன்மையான குற்றச்சாட்டு. இந்நிலையில் ட்ரம்பின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ட்ரம்ப் தொடங்கிய ட்ரூத் சோசியல்: கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், ட்ரம்பின் அனைத்துக் கணக்குகளையும் முடக்கின. ட்விட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடை விதித்தது. பேஸ்புக் நிறுவனம் ட்ரம்பிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதனையடுத்து டொனால்டு ட்ரம்ப் தற்போது, 'ட்ரூத் சோசியல்' என்ற பெயரில் தனது சொந்த சமூகவலைதளத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக ட்ரூத் சோசியலை உருவாக்கியதாக "ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x