Published : 26 Aug 2022 06:03 AM
Last Updated : 26 Aug 2022 06:03 AM

தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி10,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி - ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டாலரை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.

அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக அவர்களால் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், மாணவர்களுக்கு கல்விக் கடனில் சலுகை வழங்குவேன் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார்.

கல்விக் கடன் பெற்ற ஒவ்வொரு வருக்கும் 50,000 அமெரிக்க டாலர் அளவுக்கு தள்ளுபடி அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனில் 10,000 டாலர் (ரூ.7,98,000) தள்ளுபடி செய்யப் படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தேர்தலில் சாதகம்

இந்த அறிவிப்பு, அமெரிக்கா வில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.

அதிபருக்கு அதிகாரம்?

கல்விக் கடன் தள்ளுபடி வழங்க அதிபருக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்.பி.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும். அதிக வருவாய் உள்ள மக்களுக்கு இத்திட்டம் பயன் அளிக்காது. கடந்த ஆட்சியில், பணக்காரர்கள் பயன் பெறும் வகையில் 2 டிரில்லியன் மதிப்பிலான வரிச்சலுகைக் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களிடம், நடுத்தர மக்களுக்கு உதவியதற்காக நான் மன்னிப்பு கோர மாட்டேன். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x