Published : 11 Oct 2016 11:03 AM
Last Updated : 11 Oct 2016 11:03 AM

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: டிரம்பை மீண்டும் பின்னுக்கு தள்ளிய ஹிலாரி

டொனால்டு டிரம்ப் பெண்கள் குறித்து முன்வைத்த சர்ச்சை பேச்சு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனல்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாத நிகழ்ச்சி ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைகழகத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி நடந்து முடிந்தது. முதல் விவாததுக்கு பின் நடந்த கருத்துக் கணிப்பில் பெரும்பாலான வாக்குகள் ஹிலாரிக்கு கிளிண்டனுக்கு ஆதரவாக கிடைத்தன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது விவாத நிகழ்ச்சி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விவாதம் சுமார் 90 நிமிடங்கள் நடந்தது.

'பரஸ்பர குற்றச்சாட்டு'

அதிபர் வேட்பாளர்களின் இந்த இரண்டாவது விவாத நிகழ்வு அமெரிக்காவின் மிக மோசமாக நடைபெற்ற விவாதமாக அனைத்து தரப்பினாலும் பார்க்கப்படுகிறது. ஹிலாரியும், டிரம்பும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சுமத்தி கொண்டனர்.

கடந்த 2005-ம் ஆண்டில் பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோவை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்டது. அந்த வீடியோவில், அழகான பெண்களிடம் நான் அத்துமீறி நடந்து கொள்வேன். பிரபல தொழிலதிபராக இருப்பதால் எனது அத்துமீறலை பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த பேச்சு குறித்து ஹிலாரி விவாத மேடையில், "பெண்கள் குறித்து டிரம்ப் கூறிய இந்த வார்த்தைகளே அவர் அதிபர் வேட்பாளருக்கு முற்றிலும் தகுதி அற்றவர் என்பதை காட்டுகிறது" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், "நான் முட்டாள்தனமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து என்னை மதிப்பிட வேண்டாம். நான் 100 சதவீதம் பரிசுத்தமான நபர் என்று கூறவில்லை. ஆனால் சிறந்த அதிபராக, குடிமகனாக இருப்பேன்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டபோது தனது மனைவி ஹிலாரிக்கு பில் கிளிண்டன் நெருக்கடி கொடுத்துள்ளார். அது தொடர்பான முழு விவரங்களையும் அடுத்த நேரடி விவாதத்தின்போது வெளியிடுவேன்" என்றார்.

ஹிலாரியை சிறையில் அடைப்பேன்

ஹிலாரி வெளியுறவுச் செயலராக இருந்தபோது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீஸின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஹிலாரி அழித்தார். இதற்கு அவர் தன்னை நினைத்து அவமானப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

மேலும் "நான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் ஹிலாரி செய்த தவறுக்கு அவரை சிறையில் தள்ளுவேன்" என்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது விவாத நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியபோது. படம்: ஏஎஃப்பி

மேலும் விவாதத்தில் அமெரிக்க மக்களின் காப்பீட்டு திட்டங்களில் சீர்திருத்தம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, அமெரிக்க உள் நகரங்களில் வளர்ச்சியைக் கொண்டுவருதல், பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குதல், சிரியா போர் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வீடியோ சர்ச்சை டிரம்பை பின்னுக்கு தள்ளிய ஹிலாரி:

பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சை பேச்சுக்கு பிறகு, அமெரிக்காவின் என்.பி.சி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 52% பேர் ஹிலாரிக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர். டிரம்புக்கு 38% பேர் தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

பெண்கள் குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பேசிய கருத்து டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான மூன்றாவது விவாத நிகழ்வு அக்டோபர் 19-ம் தேதி நெவேடா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x