Published : 26 Oct 2016 10:33 AM
Last Updated : 26 Oct 2016 10:33 AM
பிரிட்டன் பிரதமர் தெரெசா மே, லண்டனில் நேற்று இந்தியர் களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்.
லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் நடந்த இந்த விழாவில் இந்தியர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அடுத்த மாதம் நான் இந்தியா சென்று அவருடன் இணைந்து கொள்ளப் போகிறேன். பிரதமராக பொறுப்பேற்றதும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வெளியே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் டெல்லி மற்றும் பெங்களூருவுக்கு செல்லவுள்ளேன். இந்த பயணம் இந்திய, பிரிட்டன் உறவுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றும். இரு நாட்டுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதும், எதிர்கால லட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதும் தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்.
பிரதமராக எனது முதல் தீபாவளி கொண்டாட்டத்தைக் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரிட்டன் சமூகத்தின் இதயத்தில் இங்குள்ள இந்திய சமூகத்தினர் எப்போதும் நிறைந்திருப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் மே, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் (பொறுப்பு தினேஷ் பட்நாயக், சுவாமிநாராயண் கோயில் வாரியத் தலைவர் ஜிட் படேல் ஆகியோர் விளக்கேற்றி தீபாவளியை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் ஆஸ்திரேலியா வில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT