Published : 31 Oct 2016 02:33 PM
Last Updated : 31 Oct 2016 02:33 PM
அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் முதல் முறையாக விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஒபாமாவுடன் இந்திய வம்சாவளி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இது குறித்து வெள்ளை மாளிகை ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒபாமாவின் பதிவு:
"கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன் முதலாக தீபாவளியைக் கொண்டாடிய அதிபர் என்பதில் பெருமை அடைகிறேன். இந்திய பயணத்தின்போது எனக்கும், மிச்செல்லுக்கும் இந்திய மக்கள் அளித்த வரவேற்பை மறக்க முடியாது. தீபாவளியன்று மும்பையில் மக்கள் எங்களை திறந்த மனதோடு வரவேற்று எங்களுடன் நடனம் ஆடினர்.
அதேபோன்று இந்த வருடம் முதல் முறையாக வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது.
இருளை அகற்றி வெளிச்சத்தை கொண்டு வருவதையே இந்த விளக்கின் வெளிச்சம் குறிக்கிறது. வெள்ளை மாளிகையில் நான் தொடங்கி வைத்த இந்தப் பாரம்பரியத்தை அடுத்து வரும் அதிபரும் தொடருவார் என நம்புகிறேன்"என்று பதிவிடப்பட்டுள்ளது.
ஒபாமாவின் இந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 33,000 பேர் இந்தப் பதிவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
ஹிலாரி கிளின்டன் தீபாவளி வாழ்த்து
ஜனநயாகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற அமெரிக்க தேர்தலில் அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் வெள்ளை மாளிகையில் தீபாவளி தொடர்ந்து கொண்டாடப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT