Published : 17 Jul 2022 06:08 AM
Last Updated : 17 Jul 2022 06:08 AM

கோத்தபய ராஜபக்ச கோரிக்கையை ஏற்க இந்தியா மறுப்பு - இலங்கை அதிபர் பதவிக்கு ரணில் உட்பட 4 பேர் போட்டி

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் வெளிநாடு செல்வதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் கோத்தபய ராஜபக்சவுக்குப் பதிலாக நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்தவாறு இ-மெயில் மூலமாக தமது ராஜினாமா கடிதத்தை சபாநாய கருக்கு அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் கோத்தபய ராஜபக்ச அனுப்பிய கடிதம் உண்மைதான் என்றும் அந்த ராஜினாமா கடிதத்தை தாம் ஏற்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதால் புதிய அதிபர் அடுத்த 7 நாட்களுக்குள் நியமனம் செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது ராஜினாமா கடிதத்தில் கூறும்போது, ‘‘எனது திறமைக்கு உள்பட்டு, என்னால் இயன்றவரை என் தாய்நாட்டுக்கு சிறப்பான சேவையே செய்தேன். கரோனா தொற்று பரவலும், அதனால் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கமும்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் பதவிக்கு தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும், சமாகி கஜன பாலவேகயா கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சித் தலைவர் அனுரா குமாரதிசநாயக, எல்பிபி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற துல்லாஸ் அல்லபெரும ஆகிய 4 பேர் போட்டியிடவுள்ளனர்.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி விலகிய கோத்தபய ராஜபக்ச கட்சியான இலங்கை பொதுஜன பெருமுன (எஸ்எல்பிபி) கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளது. இதனால் அந்தக் கட்சி இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் கோத்தபய இந்திய அரசை கேட்டிருந்தார். ஆனால் அந்த அனுமதியை வழங்க முடியாது என இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் 15 நாட்கள் மட்டுமே கோத்தபய ராஜபக்ச தங்க அனுமதி கொடுத்து இருப்பதாகவும், அவருக்கு புகலிடம் தரப்படவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நிதி

இதனிடையே, இலங்கைக்கு உதவும்பொருட்டு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை நாட்டுமக்கள் இலங்கை மத்திய வங்கிக்கு டாலர்கள் மூலம் நிதியை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x