Published : 08 Apr 2022 03:22 PM
Last Updated : 08 Apr 2022 03:22 PM

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பணக்காரர்களுக்கு வரி: இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

கோப்புப் படம்

கொழம்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பணக்காரர்களுக்கு வரியை விதித்துள்ளது இலங்கை அரசு.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் இந்த மசோதவை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 2020-21 நிதியாண்டில் 2 பில்லியன் இலங்கை ரூபாய்க்கு மேல் சம்பாதித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது 25 சதவீத முன்னறிவிப்பு வரி விதிக்கப்படும். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட இந்த வரி மூலம் 100 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட இலங்கை அரசு எதிர்பார்க்கிறது.

பெட்ரோல் தீரும் அபாயம்:இலங்கையில் நிலவும் பெரும் பதற்றத்துக்கு இடையே இந்த மாதத்துடன் அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் முற்றிலும் தீர்ந்துபோகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா அடுத்த இரண்டு வாரங்களில் 1, 20,000 டன் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோலை இலங்கைக்கு விநியோகம் செய்வதன் மூலம் இலங்கையின் மின்சாரம் நெருக்கடி குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 15, 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 40,000 டன் (3) டீசலை இந்தியா அனுப்ப உள்ளது, அதே அளவிலான பெட்ரோலும் ஏப்ரல் 22 ஆம் தேதி இலங்கைக்கு அனுப்பப்படும்.

இந்தியா புதன்கிழமையன்று இரண்டு எரிபொருள் சரக்குகளை ( 36,000 டன் பெட்ரோல் மற்றும் 40,000 டன் டீசல்) இலங்கைக்கு அனுப்பியது. இதற்கு கடன் வரம்புக்குள் தொகையை இலங்கை திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் அதற்கான தொகையை செலுத்தாததால் இரு தரப்பு அதிகாரிகளும் கடன் வரியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடன்வரி அதிகரிக்கப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு கடுமையான நெருக்கடி நிலவும்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 13 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 4 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது.

மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x