Published : 23 Apr 2016 04:11 PM
Last Updated : 23 Apr 2016 04:11 PM
அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் டெலாவர் மாகாணத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய கால் சென்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார்.
டிரம்ப் பேசியதாவது:
"எனக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டேன். அந்த சேவை மையம் அமெரிக்காவில் இருந்து இயங்குகிறதா இல்லை வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே நான் அவ்வாறு செய்தேன்.
எதிர்முனையில் பேசியவர் நான் எதிர்பார்த்ததுபோலவே ஒரு இந்தியர். அவரிடம் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்றேன்? அவர் நான் இந்தியாவில் இருந்து பேசுகிறேன் என்றார் (இந்தியர் அமெரிக்க ஆங்கிலத்தை உச்சரிப்பதுபோலவே நடித்துக் காட்டுகிறார்) அவ்வளவுதான் நான் அந்த அழைப்பை துண்டித்துவிட்டேன்.
இந்தியா ஒரு சிறந்த நாடு. எனக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. ஏன், ஜப்பான், சீனா, வியட்நாம் என எந்த நாட்டின் மீதும் கோபம் இல்லை. ஆனால், வெளிநாட்டவர்களுக்கு அவுட் சோர்சிங் மூலம் வேலைவாய்ப்புகளை தாரை வார்க்கும் நமது தலைவர்களின் முட்டாள்தனத்தின் மீதே கோபம் கொள்கிறேன்.
இவ்வாறாக வங்கி சேவைகளை வெளிநாட்டிலிருந்து அவுட் சோர்சிங் மூலம் மேற்கொள்வது சரியான நடைமுறையல்ல. இதனால், வெளிநாட்டவரே அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். அவுட்சோர்சிங் மூலம் சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகள் ஆதாயம் அடையச் செய்யும் பொருளாதார கொள்கை முடிவுகளை அனுமதிக்க முடியாது.
ஒரு குழந்தையின் கையில் உள்ள இனிப்பை பறிப்பது போல் நமது வேலைவாய்ப்புகளை பிறர் பறித்துச் செல்ல அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகள் சுரண்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது."
இவ்வாறு டிரம்ப் பேசினார்.
ஒபாமாவை விமர்சித்த டிரம்ப்
ஒபாமா தீவிரவாதிகள் குறித்து பேசும்போது 'அடிப்படைவாத முஸ்லிம்கள்' என்ற சொல்லை பயன்படுத்த தவறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார் டிரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT