Published : 31 Mar 2016 07:11 PM
Last Updated : 31 Mar 2016 07:11 PM
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தொடங்கிய அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அணுஆயுதங்களை திருடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் வசமுள்ள அணுஆயுதங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி தவறுதலாக வெடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்துள்ளார். வாஷிங்டனில் இன்று தொடங்கிய இம்மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, பிரஸல்ஸில் இருந்து நேற்று அதிகாலை வாஷிங்டன் சென்றார். பிரதமர் மோடி உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது அதிபர் ஒபாமா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசுகிறார்.
அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்துள்ளார். அமெரிக்க சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக ரஷ்ய அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலிப் கூறியபோது, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட ரஷ்யா மறுத்து வருகிறது. உலக அமைதிக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT