Published : 11 Mar 2016 04:37 PM
Last Updated : 11 Mar 2016 04:37 PM
அமெரிக்காவின் ஆரிகன் மாகாணத்தில் கோஸென் சாம்ப்சன் (66) என்ற பவுத்த துறவி மீது அவர் முஸ்லிம் என்று தவறாக நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
ஹூட் ரிவர் பகுதியில் பவுத்தத் துறவி கார் கதவை நபர் ஒருவர் எட்டி உதைக்க அது அவரது தலையை பதம் பார்த்தது. பிறகு பவுத்தத் துறவியை அந்த மர்ம நபர் கடும் வசைச்சொற்களால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு செய்தி கூறுகிறது.
தாக்குதல் நடத்தியவர் பிரவுன் நிற தலைமுடி கொண்ட வெள்ளை ஆண் நபர் என்று போலீஸ் கூறுகிறது, பிப்ரவரி 29-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் மீதான விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இது இன்னொரு ‘வெறுப்பு குற்றம்’ என்று அமெரிக்காவில் முஸ்லிம்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலையில் அடிப்பட்டதாகவும், லேசாக நினைவு தவறியது என்றும் பவுத்த துறவி சாம்சன் தெரிவித்துள்ளார். “நான் ஓரிரு நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தேன். கோபாவேச மனிதனாக அவர் காட்சியளித்தார், முஸ்லிம்கள் இதனை தினமும் அனுபவித்து வருவதாகவே நான் கருதுகிறேன். இப்படியொரு கடும் கோபத்துடன் வாழ முடியும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்தக் கோபத்தையும் அச்சத்தையும் மக்கள் வேறு விதத்தில் வெளியிட நாம் வழிகாண வேண்டும் என்று நினைக்கிறேன்.
இது என்னைப் பொறுத்தவரையிலான நிகழ்வு அல்ல, இது நேயம் மற்றும் அனைத்து மக்கள் மீதும் அன்பையும் அக்கறையையும் செலுத்த வேண்டியதை வலியுறுத்தும் விவகாரமாகும்.
அன்று எனது காரிலிருந்து நான் வெளியே இழுத்து வெளியே வரவழைக்கப்பட்டேன், யாரோ கத்தினார்கள், நான் திரும்பினேன், என் கார் கதவை உதைத்தனர் அது என் தலையையும், முகத்தையும் பலமாகத் தாக்கியது. ஆனால் அந்த நபர் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக அவர் மன்னிக்கப்பட வேண்டும், கருணைகாட்டப் படவேண்டும் என்றே மனமார நினைக்கிறேன்.
எனக்கு இஸ்லாமியம் நன்றாகத் தெரியாது, ஆனால் முஸ்லிம்கள் நமது சகோதர, சகோதரிகளே என்பதை நான் அறிந்திருக்கிறேன், எல்லோரும் கடவுளின் குழந்தைகளே என்பதை நீங்கள் எந்த அளவுக்கு ஆதரிக்கிறீர்கள் என்பதை சற்று கடினமாக நோக்குமாறு நான் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT