Last Updated : 12 Feb, 2016 11:16 AM

 

Published : 12 Feb 2016 11:16 AM
Last Updated : 12 Feb 2016 11:16 AM

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு உளவு அமைப்புகள்: பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குற்றச்சாட்டு

தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள் நிதியுதவி வழங்கி வருவதாக அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.

ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற படைத்தளபதிகள் மாநாட்டில் பங்கேற்ற ஷரீப் பேசியதாவது:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகளின் உளவு அமைப்புகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. அவர்களுக்கு சொந்த நாட்டில் அனுதாபிகள் உள்ளனர். அவர்கள் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர்.

எதிரி நாடுகளின் இத்தகைய கொடிய திட்டங்களை தோற்கடிப்போம். பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதிகளை விரட்டி அடிப்போம்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ஜார்ப்-இ-அஸ்ப் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் சிக்கல் நிறைந்தது. அதற்கு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், அங்கிருந்து புலம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு தேவையான சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் நல்லிணக்க நடவடிக்கையை மேற்கொள்வது மற்றும் ரூ.3.08 லட்சம் கோடி மதிப்பிலான சீன-பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x