Published : 27 Apr 2021 09:14 PM
Last Updated : 27 Apr 2021 09:14 PM
தெற்காசிய நாடுகள் கரோனா தடுப்பூசிகளைப் பெற சீனா உதவும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பூசிகளைப் பெற உதவி செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அவற்றை வல்லரசு நாடுகள் போட்டிபோட்டு வாங்கியுள்ளன.
அந்த வகையில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT