Last Updated : 18 Nov, 2015 09:32 AM

 

Published : 18 Nov 2015 09:32 AM
Last Updated : 18 Nov 2015 09:32 AM

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போர்: பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போர் தொடுத்துள்ளோம், அந்த அமைப்பை அழிக்கும்வரை போர் ஓயாது என்று பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே தெரிவித் துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 13-ம் தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். 350 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். தலைமையகமான ரக்கா நகரம் மீது இரண்டாவது நாளாக பிரான்ஸ் போர் விமானங்கள் நேற்றும் தீவிர தாக்குதல் நடத்தின.

இதனிடையே பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அந்த நாட்டு அதிபர் ஹோலாந்தே பேசிய தாவது:

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) வெறும் தீவிரவாத அமைப்பு அல்ல. அது ஒரு தீவிரவாத ராணுவம். அந்த ராணுவத்துக்கு எதிராக பிரான்ஸ் போர் தொடுத்துள்ளது. அந்த அமைப்பு அழிக்கும் வரை போர் ஓயாது. உலகத்துக்கே அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சிரியா, இராக்கில் அமெரிக்க கூட்டுப் படைகள், ரஷ்ய ராணுவம் தனித்தனியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலை ஒருங்கிணைக்க பிரான்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அதிபர் ஹோலாந்தே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அதிபர் ஹோலாந்தேவை பாரீஸில் நேற்று சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x