Published : 14 Nov 2015 04:14 PM
Last Updated : 14 Nov 2015 04:14 PM

உலக மசாலா: இலை ஓவியங்கள்

போலந்தைச் சேர்ந்த ஜோன்னா விரஸ்கா உதிர்ந்து விழக்கூடிய இலைகளில் இருந்து அற்புதமான ஓவியங்களைத் தீட்டி வருகிறார். ஓவியம் தீட்டுவதோடு, சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு செய்தியையும் சொல்வதுதான் இவருடைய இலை ஓவியங்களின் சிறப்பு. இலைகளில் உள்ள பச்சையத்தை நீக்கி, நரம்புகளில் இவர் ஓவியம் தீட்டுவதில்லை. இலைகளைச் சேகரித்து, அவற்றைப் பெரிய புத்தகங்களுக்கு இடையே வைத்து விடுகிறார். 2 வாரங்களில் இலைகளில் உள்ள நீர்ச்சத்து உலர்ந்து, காகிதம் போல மாறிவிடுகின்றன. பிறகு அந்த இலையில் ஓவியங்களைத் தீட்டி விடுகிறார் ஜோன்னா.

‘‘காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இவற்றால் சுற்றுச் சூழல் சீர்கெடுகிறது. அதனால் காகிதங்களைப் பயன்படுத்தாமல் என் ஓவியங்களை உருவாக்கி வருகிறேன். தேவை இன்றி யாரும் காகிதம் பயன்படுத்தாதீர்கள். நம் அற்புதமான பூமி மிக மோசமான நிலையில் இருக்கிறது. என்னுடைய இலை ஓவியங்கள் உலக அளவில் பிரபலமாகும் என்று நான் நினைத்ததே இல்லை. இன்ஸ்டாகிராமில் ஓவியங்களைப் போட்டவுடன் உலகம் முழுவதும் இருந்து ஆதரவு குவிகிறது. நிறையப் பேர் காகிதங்களை அவசியம் இன்றி பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜோன்னா.

ஓவியம் போலவே உங்கள் எண்ணமும் அழகு!

லண்டனின் முதல் பெண்கள் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் எம்மா லான்மன்.ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பெண்கள் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கு எங்கள் நிறுவனமே சாட்சி. பொருட்களைப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைப்பதிலிருந்து, அதை இன்னொரு இடத்துக்கு கவனமாக எடுத்துச் செல்வது வரை பெண்கள் பொறுமையோடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்கிறார்கள்.

என் வீட்டில் நான், என் மகள், பேத்தி என்று பெண்களாகவே வசிக்கிறோம். வாழ்க்கை என்ற மிகப் பெரிய விஷயத்தையே பெண்களால் தனியாக எதிர்கொள்ள முடியும்போது இதுபோன்ற வேலைகளை எதிர்கொள்ள முடியாதா என்ற கேள்வி வந்தபோது, தோன்றியதுதான் இந்த வேன் கேர்ள்ஸ் நிறுவனம். ராணுவம், காவல்துறை, ஆம்புலன்ஸ் சர்வீஸ்களில் எல்லாம் பெண்கள் இருக்கிறார்கள்.

அதேபோல எலக்ட்ரீசியன், கார்பெண்டர், ப்ளம்பர் போன்ற பணிகளையும் பெண்கள் விரைவில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஆண்கள்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஆண்களை அனுமதிப்போம். மற்றபடி கடினமான வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்துவிடுவோம். அதே சமயம் நாங்கள் ஆண்களுக்கு எதிரி அல்ல. எங்கள் அலுவலகத்தில் ரிஷப்ஷனிஸ்ட் வேலையை ஒரு ஆணுக்குத்தான் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார் எம்மா.

கலக்குங்க கேர்ள்ஸ்!

ஜப்பானில் இருந்து வெளிவரும் ‘மிஸ்டர் பேப்’ என்ற ஆண்கள் பத்திரிகை முழுக்க முழுக்க உடல் எடை அதிகம் கொண்ட பருத்த மனிதர்களுக்காகவே வெளிவருகிறது. இதுவும் ஃபேஷன் பத்திரிகைதான். ‘‘குண்டானவர்களுக்கு, குண்டானவர்களால் உருவாக்கப்படுகிறது இந்தப் பத்திரிகை. குண்டாக இருப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதும்தான் இந்தப் பத்திரிகையின் முக்கிய நோக்கம். உலகம் முழுவதும் எடை குறைப்பு என்ற விஷயம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

குண்டானவர்கள் மிகவும் சோர்ந்து போய்விடுகிறார்கள். குண்டானவர்களுக்கு எப்படி ஆடை அணிவது, ஆரோக்கியமாக எப்படி இருப்பது, காதல், கல்யாணம் போன்றவற்றை எப்படிக் கையாள்வது போன்ற விஷயங்களைத் தருகிறோம். நாங்கள் எடை அதிகரிக்கும்படி சொல்வதில்லை. எங்களைப் பொறுத்தவரை குண்டானவர்கள் நம்பிக்கையோடு வாழவும், அவர்கள் மனத்திலிருந்து தாழ்வு மனப்பான்மையை அகற்றவும் உதவி செய்கிறோம்’’ என்கிறார் பத்திரிகையின் ஆசிரியர் நோரிஹிடோ குராஷினா. ஜப்பானியர்களில் மூன்றில் ஓர் ஆண் எடை அதிகம் உடையவராக இருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் ஆண்கள் உடல் எடை அதிகரித்தும், பெண்கள் உடல் எடை குறைந்தும் காணப்படுகிறார்கள். ஆண்கள் அதிக நேரம் அலுவலகத்தில் பணிபுரிவதால் அவர்களுக்கு ஓய்வுக்கோ, உடற்பயிற்சிக்கோ நேரமே இருப்பதில்லை. அவர்களுக்காகவே இந்தப் பத்திரிகை என்கிறார் குராஷினா. முதல் இதழ் 50 ஆயிரம் பிரதிகள் அடிக்கப்பட்டு, மிக விரைவில் விற்பனையாகிவிட்டன.

ம்… புதிய முயற்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x