Published : 18 Jan 2021 12:19 PM
Last Updated : 18 Jan 2021 12:19 PM

ஆப்கானிஸ்தானில் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண் நீதிபதிகள் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகள் இருவர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்களது ஓட்டுநர்களும் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவ்வப்போது ஆப்கன் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிப்புச் சம்பங்களில் தாலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், இன்று கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x