Published : 07 Dec 2020 06:49 PM
Last Updated : 07 Dec 2020 06:49 PM

இத்தாலியில் கரோனா பலி 60,000-ஐக் கடந்தது

இத்தாலியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 18,887 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 662 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 60,078 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 1,63,550 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பல மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x