Published : 21 Oct 2020 07:12 PM
Last Updated : 21 Oct 2020 07:12 PM
மெக்சிகோவில் இரண்டாம் கட்ட அலை பரவும் அபாயம் உள்ளது என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டாம் கட்டப் பரவல் தொடங்க உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் கரோனா தொற்றுகளால் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்'' என்று மெக்சிகோ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 2,26,220 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,54,888 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,15,950 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 86,893 பேர் பலியாகி உள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT