Published : 10 Oct 2020 08:34 PM
Last Updated : 10 Oct 2020 08:34 PM
எங்கள் நாட்டில் யாருக்கும் கரோனா இல்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்து, முழு ஊரடங்கு உத்தரவை அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும், பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்றும் வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
மேலும், கரோனா பரவலைத் தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். சீனாவிலிருந்து வருபவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு வடகொரிய அரசு தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
மேலும் 75-வது ஆண்டு விழாவில் ஏவுகணைகளின் அணிவகுப்பையும் வடகொரியா நடத்தியது. ஏவுகணைச் சோதனை காரணமாக பொருளாதாரத் தடைக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT