Published : 14 Sep 2020 05:00 PM
Last Updated : 14 Sep 2020 05:00 PM

ரஷ்யாவில் 10,68,320 பேர் கரோனாவால் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் உள்ள 83 மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,68,320 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் மாஸ்கோவில் மட்டும் 696 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரம் பேருக்குக் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனாவிலிருந்து இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய்த் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும், தங்கள் தடுப்பூசி அனைத்துக் கட்டச் சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x