Published : 21 Jul 2020 04:59 PM
Last Updated : 21 Jul 2020 04:59 PM

என்னைவிட தேசப்பற்று மிக்க நபர் எவருமில்லை: ட்ரம்ப்

என்னைவிட தேசப்பற்றுமிக்க நபர் எவரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிய மறுத்துவந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சில நாட்களுக்கு முன்னர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்றபோது முதல் முறையாக முகக்கவசம் அணிந்தார்.

இந்த நிலையில் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்ட ட்ரம்ப், தன்னைவிட தேசப்பற்றுமிக்க நபர் எவருமில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அந்தக் கண்ணுக்குத் தெரியாத சீனாவின் வைரஸைத் தோற்கடிப்பதில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்.

சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத நேரத்தில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். என்னைவிட தேசப்பற்று மிக்கவர்கள் எவரும் இல்லை. உங்களது விருப்பமான அதிபர்” என்று பதிவிட்டுள்ளார்.

கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

முன்னதாக, கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார். சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். இது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தைச் சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

வர்த்தக ரீதியாகவும் சீனா, அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தகக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x