Published : 21 Apr 2020 04:24 PM
Last Updated : 21 Apr 2020 04:24 PM

ஈகைத் திருநாளைக் கொண்டாட வேறு பகுதியிலிருந்து சொந்த ஊர் திரும்பத் தடை: இந்தோனேசியா

ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது.

இந்தோனேசிய அரசு கரோனா வைரஸ் தொடர்பாக அலட்சியமாக இருந்து வருவதாகவும், மிகக் குறைந்த அளவிலே இதுவரை பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பதாகவும் இதன் விளைவாக அடுத்த இரு மாதங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று இருக்கும் என்றும் அந்நாட்டு மருத்துவக் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

வெவ்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கரோனா பாதிப்பு சாத்தியம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தோனேசிய அரசு விரைந்து செயலில் இறங்காவிட்டால், மே மாத முடிவில் 15 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும். 1,40,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் ஒரு இந்தோனேசியப் பல்கலைக்கழகம் தெரிவித்தருந்தது.

மேலும், ஈகைத் திருநாளைக் கொண்டாட மக்கள் இடம்பெயரும்போது இந்தோனேசியாவில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஈகைத் திருநாளை ஒட்டி இந்தோனேசியாவில் வேறு பகுதிகளிலிருந்து தங்கள் ஊருக்கு மக்கள் திரும்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகளை கடுமையாக்குமாறும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஈகைத் திருநாளையொட்டி சுமார் 3 கோடி இந்தோனேசியர்கள் பெரிய நகரிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் கரோனா தொற்றால் இதுவரை 6,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 590 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x