Last Updated : 12 Apr, 2020 12:22 PM

 

Published : 12 Apr 2020 12:22 PM
Last Updated : 12 Apr 2020 12:22 PM

அதிகரிக்கும் புரியாத புதிர்கள் : அமெரிக்காவில் வென்ட்டிலேட்டர்கள் காரணமாகவும் பல மரணங்கள்- திகைப்பில் மருத்துவர்கள் திணறல்

உலகம் முழுதும் சீரியஸ் கரோனா வைரஸ் நோயாளைகளை மீட்க வென்ட்டிலேட்டர்கள் நோக்கி அதிகம் ஓடும் காலக்கட்டத்தில் நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென் ட்டிலேட்டர்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.

சில மருத்துவமனைகளில் வென் ட்டிலேட்டர்களினால் ஏற்படும் கரோனா மரணங்கள் எண்ணிக்கை வழக்கத்துக்கு அதிகமாக இருப்பதால் இந்த மெஷின்கள் சில நோயாளிகளுக்கு ஆபத்தாக இருப்பதாக கவலையடைந்துள்ளனர்.

மருத்துவர்கள் இன்னமும் கூட தாங்கள் கற்றுக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறோம் என்கின்றனர், ஏனெனில் அனுபவத்தின் அடிப்படையிலும், நிகழ் நேர தரவுகளின் அடிப்படையிலும்தான் கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வென் ட்டிலேட்டர்கள் நுரையீரல் தோல்வி அடையும் நோயாளிகளுக்கு பிராணவாயுவை அளிக்கும் கருவியாகும். இந்த மெஷினைப் பயன்படுத்த நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து தொண்டையினுள் குழாய் ஒன்று செலுத்தப்படும். இத்தகைய நிலைக்கு வந்து விடும் நோயாளிகள் மரணமடைவது இயல்புதான் என்றாலும் வென் ட்டிலேட்டர்களே மரணத்துக்கு எப்படி காரணமாகும் என்று அவர்களுக்கு புரியாத புதிர் ஒன்று எழுந்துள்ளது.

பொதுவாக தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகள் வென் ட்டிலேட்டர்களில் வைத்தாலும் கூட 40-50 பேர் மரணமடைந்து விடுவார்கள், ஆனால் நியூயார்க்கில் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்பட்ட 80%க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், இதுதான் அங்கு புதிய கவலையாக உருவெடுத்துள்ளது.

இதே போன்று வெண்ட்டிலேட்டர் மரணங்கள் பிரிட்டன், சீனாவிலும் ஏற்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீனாவில் வூஹானில் வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்களில் 86% மரணமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை. அதாவது தொற்றுக்கு முன்பாக நோயாளிகள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதைப் பொறுத்தது என்கின்றனர் மருத்துவர்கள் சிலர். அதாவது முன்னமேயே அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்ததா என்பதுடன் தொடர்புடையது என்கின்றனர்.

ஆனால் சில நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை வெண்ட்டிலேட்டர்கள் இன்னும் மோசமடையச் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், உயர் அழுத்த பிராணவாயுவை மிகச்சிறிய மூச்சுக்குழாய் மூலம் உட்செலுத்துவதும் பிரச்சினையாக இருக்கலாம் என்கின்றனர்.

மூச்சுக்குழல் நோயில் நிபுணரான டாக்டர் எடி ஃபேன் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளின்படி மருத்துவ வெண்ட்டிலேஷன் நுரையீரல் நோயை மோசமாக்கவே செய்யும்” என்றார். ஆனால் பிராண வாயு உட்செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கலாம் என்கிறார் டாக்டர் எடி.

இதனைப்பற்றி முழுதும் ஒன்றும் தெரியவராததால் சில மருத்துவர்கள் வெண்ட்டிலேட்டர்கள் பக்கமே செல்வதில்லையாம். மற்ற நோயாளிகள் 2-3 நாட்கள் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்பட்டால் கரோனா தீவிர நோயாளிகள் 10-15 நாட்கள் வைக்கப்படுகின்றனர், இதனால் மரணங்கள் ஏற்படுவதாகவும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதுவும் சரிவர முடிவு தெரியாத நிலையில் டாக்டர்கள் நோயாளிகளைக் காப்பாற்றுவதில் விழிபிதுங்கி கையைப் பிசைந்து செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x