Published : 11 Apr 2020 03:42 PM
Last Updated : 11 Apr 2020 03:42 PM

துருக்கியில் ஒரே நாளில் 4,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி

துருக்கி அதிபர் எர்டோகன்

துருக்கியில் புதிதாக 4, 747 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து துருக்கியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,029 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 4, 747 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47, 029 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுத்து ஒரு நாளில் 98 பேர் பலியானதைத் தொடர்ந்து கரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,062 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 2 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

துருக்கி சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹ்ரெடின் கோகா கூறும்போது, “ தற்போது தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தீவிர சிகிச்சை எடுத்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அடுத்து வரும் இரண்டு நாட்கள் நமக்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x