Last Updated : 25 Aug, 2015 10:24 AM

 

Published : 25 Aug 2015 10:24 AM
Last Updated : 25 Aug 2015 10:24 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 12

1971 இறுதியில் வங்கதேசம் சுதந்திரம் பெற்றபின் பாகிஸ்தானின் பிடியிலி ருந்து முஜிபுர் ரஹ்மான் விடுவிக் கப்பட்டார். லண்டன் வழியாக அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப் பட்டார். (வங்கதேசம் அப்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தது). முஜிபுர் ரஹ்மான் வங்க தேசத்தின் பிரதமராக அறிவிக்கப் பட்டார். (பின்னர் அதிபரானார்).

ஆனால் ஆட்சியில் கசப்புகள் உருவாயின என்பதைக் குறிப்பிட்டி ருந்தோம். தனிநாடாக ஆனவுடன் பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று நம்பினார்கள் வங்கதேச மக்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக அதன் பொருளாதாரம் வேகமாக சரிந்தது.

அரசியல் ரீதியாகவும் முஜிபு ருக்குப் புதிய பகைமைகள் தோன்றத் தொடங்கின. ராணுவத் தின் ஒரு பிரிவுக்கு ‘ஜதியோ ரக்கி பாகினி’ என்று பெயரிடப் பட்டிருந்தது. இதில் உள்ளவர்கள் முஜிபுர் ரஹ்மானுக்கு மேலும் நெருக்கமானவர்களாகக் கருதப் பட்டனர். பொதுமக்களிடையே இருந்த ஆயுதங்களை மீட்பது தான் இந்தப் பிரிவின் முக்கியக் குறிக்கோள் என்று கூறப்பட்டது. என்றாலும் முஜிபுர் ரஹ்மான் ஆட்சிக்குக் காவலாக இருப்பது தான் இதன் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக ராணுவத்தின் பிற பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். சில பெரும்புள்ளிகள் அரசை வீழ்த்தி ராணுவ ஆட்சியை கொண்டுவர முடிவெடுத்தனர். அவாமி லீக்கிலிருந்த சிலரும் இதற்குத் துணை நின்றனர். முக்கிய மாக முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் அமைச்சராக இருந்த மொஸ்டாக் அகமது, தான் அதிபராக தயார் என்று ராணுவத்துக்கு சிக்னல் கொடுத்தார். பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆகஸ்ட் 15, 1975 அன்று விடியற் காலையில் சதித்திட்டம் தீட்டிய வர்கள் தங்களை நான்கு பகுதி களாகப் பிரித்துக் கொண்டனர்.

முஜிபுர் ரஹ்மானின் வீட்டை நோக்கி ஒரு பிரிவினர் சென்றனர்.வேறொரு கும்பல் முஜிபுரின் சகோதரி மகன் ஷேக் ஃபஸ்லுல் ஹக் என்பவரின் வீட்டை நோக்கிச் சென்றது. இவர் அவாமி லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர். மூன்றாவது பிரிவு முஜிபுரின் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்த அப்துர் ரப் ஸெர்னியாபத் என்பவரின் வீட்டை நோக்கிச் சென்றது.

நான்காவது பிரிவினரின் எண்ணிக்கை அதிகம். இவர்களின் நோக்கம் மேற்படி பிரிவுகள் படுகொலைகளில் ஈடுபடும்போது எதிர்க்கும் பாதுகாப்புப் படையை எதிர்கொள்வதுதான்.

முதல் குழு முஜிபுர் ரஹ்மானின் வீட்டை அடைந்து தாக்குதலைத் தொடங்கியது. இதற்குத் தலைமை வகித்தவர் மேஜர் ஹுடா. வீட்டின் இரண்டாவது தளத்தில் இருந்த முஜிபுரின் மகன் ஷேக் கமல் என்பவர் பதிலுக்குத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பலன் இல்லை.கிளர்ச்சி ராணுவம் முன்னேறியது. முஜிபுர் ரஹ்மான் மிக அவசரமாக தொலைபேசியில் ராணுவத் தளபதி ஜமீலுக்கு விபரீதத்தை உணர்த்தியிருக்க வேண்டும். இவர் ராணுவ உளவுத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டி ருந்தார். திட்டமிட்டபடி முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப் பட்டார். உடலில் 20 இடங்களில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு அப்போதும் வலது கையில் சிகார் பைப்பை விடாமல் பற்றிக் கொண்டிருந்த நிலையில் முஜிபுர் ரஹ்மானின் உயிர் பிரிந்தது.

உளவுத் துறைத் தலைவர் ஜமீல், முஜிபுர் ரஹ்மான் வீட்டு வாசல் அருகே சுடப்பட்டு உயிரிழந்தார். மாடியில் இருந்த முஜிபுரின் மனைவி கொல்லப்பட்டார். மகன் ஷேக் கமலும் படுகொலை செய்யப்பட்டார். பத்தே வயது நிரம்பிய ஷேக் ரஸலும் உயிரிழந்தார். இவர்களைத் தவிர மேலும் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். வேறு சில இடங்களுக்குச் சென்றிருந்த மூன்று பிரிவினரும் தத்தம் திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றினர்.

இத்தனை பேரில் உயிர் தப்பியவர்கள் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஹஸீனாவும் அவரது சகோதரி ரஹானாவும்தான். இவர்கள் இருவரும் ஜெர்மனியில் பெர்லின் நகருக்குச் சென்றிருந்தனர். அப்போதே ஹஸீனாவுக்குத் திருமணம் ஆகியிருந்தது. அவரது கணவர் அணுவியல் விஞ்ஞானி யாக விளங்கியவர். ஹஸீனா வங்கதேசத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

ஆக முஜிபுர் ரஹ்மான் படுகொலையைத் தொடர்ந்து ஹஸீனாவும் அவரது தங்கை ரஹானாவும் அனாதைகள் ஆக்கப் பட்டனர். தந்தை, தாய், நெருங்கிய உறவினர்கள் அத்தனை பேரையும் ஒரே நாளில் இழந்து விட்டனர். தங்களுக்கு அப்போதைய பாதுகாப்பான இடம் இந்தியாதான் என்று கருதி அங்கு வந்தனர்.

(இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி சமீபத்தில் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த ஹஸீனா தன் மகள், சகோதரி மற்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் நேரில் வந்ததும், நெகிழ்ச்சியுடன் பேசியதும் சிலருக்கு வியப்பை அளித்திருக்கலாம். அதன் பின்னணி இதுதான்.

சுவ்ரா வங்கதேசத்தில் (அப்போ தைய கிழக்கு வங்காளம்) பிறந்தவர். தனது பத்தாவது வயது வரை அங்கு வளர்ந்தவர். அப்போது இவரது குடும்பமும், ஹஸீனாவின் குடும்பமும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாயினர்.

தந்தையை இழந்து பாதுகாப்பு தேடி ஹஸீனா இந்தியா வந்தபோது அவருக்குப் பாதுகாப்பு கொடுத்தார் சுவ்ரா முகர்ஜி. அப்போது இந்திரா காந்தி அமைச்சரவையில் ஜுனியர் அமைச்சராகப் பதவியேற்றிருந்த பிரணாப் முகர்ஜியோடு சுவ்ராவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது.

கால ஓட்டத்தில் ஹஸீனா வங்கதேசம் திரும்பிய பிறகும் அவரது குழந்தைகள் தங்கள் படிப்பை இந்தியாவில்தான் தொடர்ந்தனர். அந்தக் குழந்தைகளை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார் சுவ்ரா.)

முஜிபுர் ரஹ்மான் இறந்த மூன்று வருடங்களில் அவாமி லீக்கை நிறுவிய வேறு முக்கிய நான்கு தலைவர்கள் கைது செய்யப் பட்டு டாக்கா சிறையில் அடைக்கப் பட்டனர். வங்கதேசத்தின் முதல் பிரதமரான தாஜுதீன் அகமது, முன்னாள் பிரதமர் மன்சூர் அலி, முன்னாள் துணை ஜனாதிபதி சையது நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் கம்ருஜமான் ஆகியவர்கள்தான் அந்த நால்வரும். இவர்கள் நால்வரும் 1975 நவம்பர் 3 அன்று டாக்கா சிறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x