Published : 25 Feb 2020 06:38 PM
Last Updated : 25 Feb 2020 06:38 PM
ஈரானில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானில் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு 95 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அதிகமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கான விமானப் போக்குவரத்தை ஐக்கிய அமீரகம் தடை செய்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அமீரகம் அதிகாரிகள் தரப்பில், “ஈரானுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் ஒருவார காலத்திற்கு நிறுத்தப்படும். இது மேலும் நீட்டிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT