Published : 25 Feb 2020 04:58 PM
Last Updated : 25 Feb 2020 04:58 PM
பயங்கரவாதத்திலிருந்து எங்கள் நாட்டு மக்களைக் காக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி ஏற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக திங்கட்கிழமை இந்தியா வந்தார். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
'நமஸ்தே ட்ரம்ப்' , சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்த ட்ரம்ப், ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பார்த்து ரசித்தார். பின்னர் மனைவி மெலானியா ட்ரம்ப்புடன் தாஜ்மஹால் முன்னிலையில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
2-வது நாளான இன்று, அதிபர் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே நடைபெற்ற சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மோடியுடனான இரண்டாவது நாள் சந்திப்பில் பயங்கரவாதம் குறித்து ட்ரம்ப் கூறும்போது, “இந்தியப் பிரதமர் மோடியுடன் நடத்திய ஆலோசனையில் தீவிர பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காக்க உறுதி ஏற்றுக்கொண்டோம். இதன் காரணமாகவே பயங்கரவாத குழுக்களைத் தடுக்க எனது அரசாங்கம் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT