Published : 19 Feb 2020 04:04 PM
Last Updated : 19 Feb 2020 04:04 PM
வால்ஸ்ட்ரீட் பத்திரிகை தனது தலையங்கத்தில் சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று குறிப்பிட்டதையடுத்து அந்தப் பத்திரிகை நிருபர்கள் 3 பேர் சீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சீனா உத்தரவிட்டுள்ளது.
"China is the Real Sick Man of Asia" என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ‘நிறவெறி’தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றம்சாட்டியது.
அமெரிக்காவில் சீன அரசு ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி சீனா அமெரிக்காவை விமர்சித்துள்ளது.
இதுவரை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தத் தலையங்கம் குறித்து மன்னிப்பு கேட்கவில்லை என்று சாடிய சீன வெளியுறவு அமைச்சகம், ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர்களின் பிரஸ் கார்ட் இனி செல்லாது என்று அறிவிக்கிறோம், நிருபர்கள் சீனாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
ஜோஷ் சின், சாவோ டெங் ஆகிய இரண்டு நிருபர்களும் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள், இன்னொருவர் ஆஸ்திரேலியரான பிலிப் வென், இவர்கள் மூவரும் 5 நாட்களில் சீனாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சீனாவில் கரோனா வைரஸ் பலி 2,000த்தைக் கடந்து விட்ட சூழ்நிலையில், சீன அரசின் செயல்பாடுகளை அமெரிக்கப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வருவதும் இந்த நடவடிக்கையின் பின்புலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT