Published : 03 Feb 2020 04:52 PM
Last Updated : 03 Feb 2020 04:52 PM
இராக்கின் புதிய பிரதமராக முகமத் அல்லாவி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இராக்கின் அதிபராக பர்ஹம் சலேவும் பிரதமராக அடல் அப்துல் மஹ்தியும் பதவி வகித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வேலையின்மை, ஊழல், பொதுச் சேவைகளில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இராக் நிர்வாகத்தில் ஈரான் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. போராட்டக்காரர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான மோதல் சம்பவங்களில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டம் காரணமாக அப்துல் மஹ்தி கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் இராக் அதிபர் பர்ஹம் சலிஹ், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான முகமது அல்லாவியை இராக் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை நியமித்தார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை தற்போது முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக இராக்கில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT