Published : 19 Dec 2019 06:12 PM
Last Updated : 19 Dec 2019 06:12 PM
சிரியாவின் இட்லிப் பகுதியிலிருந்து தப்பி சுமார் 50,000 பேர் துருக்கி வந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலேசியாவில் நடந்த உச்சி மாநாட்டில் எர்டோகன் இன்று (வியாழக்கிழமை) பேசும்போது, “ பாருங்கள் சுமார் 50,000 பேர் இட்லிப் பகுதியிலிருந்து தப்பி மீண்டும் எங்கள் நாட்டுக்கு வந்துள்ளனர். துருக்கியில் ஏற்கெனவே 4 மில்லியன் அகதிகள் உள்ளனர்” என்றார்.
மேலும், சிரியாவின் வடக்குப் பகுதியில் சிரிய அகதிகளைக் குடியமர்த்துவது தொடர்பான தனது முடிவுக்கு ஆதரவு அளிக்காத இஸ்லாமிய நாடுகளையும் எர்டோகன் விமர்சித்தார்.
துருக்கியில் தற்போதைய நிலவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது.
முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT