Published : 16 Oct 2019 05:09 PM
Last Updated : 16 Oct 2019 05:09 PM

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது ராணுவம் தாக்குதல்: 7 பேர் பலி; 8 பேர் கைது

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 7 தலிபான்கள் பலியாகினர். 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வார்டார்க் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஆப்கன் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. இதில் 7 பேர் பலியாகினர். 8 பேர் கைது செய்யப்பட்டனர். தலிபான்களின் ஆயுதங்கள் தாக்கி அழிக்கப்பட்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து இதுவரை தலிபான்கள் தரப்பில் செய்தி வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை இறந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தலிபான்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் சந்தித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x