Published : 28 Sep 2019 08:50 PM
Last Updated : 28 Sep 2019 08:50 PM
அமெரிக்க வாழ் இந்தியரான சந்தீப் சிங் தாலிவால் என்ற முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய வெளியுறவு விவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான சந்தீப் சிங் தாலிவால் என்ற சீக்கியர் டெக்சாஸ் மாகாண காவல்துறையில், போக்குவரத்து துறை உயர் அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
அவர், ஹூஸ்டன் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டபோது, காரில் வந்த ஒருவர் சந்தீப்பை சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சந்தீப்பின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவில் வசிக்கும் சந்தீப் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சீக்கியரான சந்தீப்புக்கு, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
42 வயதான சந்தீப் சிங் சீக்கியக் கலாச்சாரத்தின்படி பணியின் போது தலையில் டர்பன் மற்றும் தாடி வைத்துக்கொள்ளலாம் என கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா அனுமதி அளித்ததையடுத்து தலைப்புச் செய்தியில் இடம்பெற்றார்.
இவர் சம்பவ தினத்தன்று ஆண் மற்றும் பெண் சென்ற வாகனத்தை நிறுத்தினார். இதில் காரிலிருந்து வெளியே வந்த ஒருவர் சந்தீப் சிங் மீது இருமுறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT