Published : 21 Sep 2019 11:05 AM
Last Updated : 21 Sep 2019 11:05 AM
இராக்கில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள புனித நகரமான கிர்பெல்லா நகரின் அருகில் பேருந்து ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் அதிலிருந்த பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இராக்கில் ஷியா பிரிவினரைக் குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருப்பார்கள் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஸுக்கு எதிரான போர்
ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் இராக்கில் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது
இதில் கடந்த வருடம் இராக் அரசு அமெரிக்கா உதவியுடன் ஐஎஸ்ஸுக்கு எதிரான போரை வெற்றி அடைந்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT