Published : 13 Sep 2019 06:00 PM
Last Updated : 13 Sep 2019 06:00 PM

சிரியாவில் துருக்கி ஆதரவுப் பகுதியில் குண்டுவெடிப்பு

சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் சிரிய கண்காணிப்புக் குழு , “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அஃப்ரின் நகரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.

அஃப்ரின் பகுதியைக் கடந்த ஆண்டு துருக்கி ஆதரவு தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அங்கு அவ்வப்போது சிரிய அரசுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தக் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை

இந்நிலையில் துருக்கி - சிரிய எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால் தங்களது நாட்டுப் படை வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x