Published : 10 Sep 2019 05:31 PM
Last Updated : 10 Sep 2019 05:31 PM

போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் சிரியாவில் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக் குழு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “சிரியாவில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அறிவித்திருத்த நிலையில் அந்நாட்டின் வடகிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து சிரிய அரசுப்படைகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x