Published : 10 Jun 2015 11:10 AM
Last Updated : 10 Jun 2015 11:10 AM
`த சிம்ப்சன்ஸ்’ காமிக்ஸ் தொடரின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அந்தத் தொடர், ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் மீண்டும் வரவிருக்கிறது. அதேநேரம் அதன் பிரபல கதாபாத்திரமான பார்ட் சிம்ப்சன் கொல்லப்படவும் இருக்கிறார்.
ஓவியர் மேட் குரோய்னிங் உருவாக்கிய புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் `த சிம்ப்சன்ஸ்’. ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் அணு மின்நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வாளராக இருப்பவர் ஹோமர் சிம்ப்சன்.
இவருடைய மனைவி, மகன், மகள், மேகி என்னும் கைக்குழந்தை, ஒரு நாய், பூனை என வளர்ப்புப் பிராணிகளும் சிம்ப்சன்ஸ் குடும்பத்தில் அடக்கம். இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக சித்தரிப்பதுதான் இந்தத் தொடரின் சாராம்சம்.
இந்தத் தொடரில் ஹோமர் சிம்ப்சனின் மகன் பார்ட் சிம்ப்சனை கொலை செய்ய நினைக்கும் எதிரி கதாபாத்திரம் சைடுஷோ பாப். இந்தத் தொடரில் இதற்கு முந்தைய பாகங்களில் பார்ட் சிம்ப்சனை கொலை செய்வதற்கு, பாப் செய்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிவதாகவே இருந்தன.
ஆனால், “இது போல சலிப்படைய வைக்கும் வறட்சி யான நகைச்சுவை காட்சிகளின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த முறை அதுபோன்ற நகைச்சுவைகளைத் தவிர்க்க நினைத்தோம்” என்கிறார் தொடரின் இணைத் தயாரிப்பாளரான அல் ஜீன்.
அதன் வெளிப்பாடுதான் சைடுஷோ பாபின் கொலை செய்யும் முயற்சி. பார்ட் சிம்ப்சனை கொல்ல நினைக்கும் பாபின் முயற்சி இந்த முறை பலிக்குமா என்பது இந்தத் தொடரின் ரசிகர்களுடைய கேள்வியாக இருக்கும்.
விரைவில் வரப்போகும் 'டிரீஹவுஸ் ஆஃப் ஹாரர்' என்ற பாகத்தில் பார்ட் சிம்ப்சனை, பாப் கொல்லப் போகிறான். அதற்காக பார்ட் சிம்ப்சனின் ரசிகர்கள் கவலைப்பட வேண்டி யதில்லை. பார்ட் சிம்ப்சன் கூடிய விரைவில் உயிர்த்தெழுந்தும் விடுவாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT