Last Updated : 01 Apr, 2015 10:51 AM

 

Published : 01 Apr 2015 10:51 AM
Last Updated : 01 Apr 2015 10:51 AM

சீறும் சீனா - 1

வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத் தலைமையை எந்த நாடு ஏற்கும்? என்ற கேள்விக்கு சோவியத் யூனியன் என்பது, 1970-களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பதிலாக இருந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். `மத்திய கிழக்கு நாடுகள்’. இப்படி மாற்றிக் கொண்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பெட்ரோலியக் கிணறுகள்.

ஆனால் அமெரிக்காவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது. “இன்னும் நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை நாம் தாண்டிவிட வேண்டும்’’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சில ஆண்டுகள்தான். அவர்கள் அத்தனை பேருக்கும் எழுந்தது ஒரு திகில் உணர்வு. “சீனாவும், இந்தியாவும் இணைந்து வருங்கால உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானித்து விடுமோ?’’.

ஆக சீனா நமக்கு கடும் போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்தியாவும் பலவிதங்களில் அதற்கு போட்டியை அளித்துக் கொண்டிருக்கிறது. (மக்கள் தொகையில்தானே என்று கேலி பேச வேண்டாம்).

சீனாவுக்கும் நமக்கும் பல வருடங்களுக்கு முன் ஒரு நேரடிப் போர் நடந்தபோது, “சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது’’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கு தமிழகத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்த காட்சி செய்திப் படமாக அத்தனை திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டன. ஆக சீனாவை ஒரு நாகப்பாம்போடு ஒப்பிட்டோம். இப்போதும் சீனா சீறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காகூட அதை அடக்க நினைத்தாலும் மனதில் அஞ்சிக் கொண்டுதான் இருக்கிறது.

சீனாவைப் பாம்பாக வர்ணிப்பது ஒருபுறம் இருக்க, சீனர்கள் பாம்புக் கறியையும் சாப்பிடுவார்கள் என்ற குறிப்பேகூட பலருக்கும் அருவருப்பையும், லேசான அச்சத்தையும் அளிக்கக்கூடியதுதான்.

சீனாவின் வர்த்தகம் கொஞ்சநஞ்சமல்ல. குறைவான விலையில் பொருள்களை சந்தைக்கு அனுப்புவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலக அளவில் துணிகள் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் சீனாவுடையதுதான்.

தனது வளமான டி.வி.செட் விற்பனை முன்னணியை ஜப்பான் சீனாவுக்குத் தாரை வார்த்து விட்டது. அமெரிக்காவில் சீன ஃபர்னிச்சர் எக்கச்சக்கமாக விற்கின்றன. மிக மென்மையான பட்டுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது இத்தாலி. அவர்களை ஒவர்டேக் செய்துவிட்டது சீனா.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சீனாவுக்குச் சென்று வருபவர்கள்கூட அங்கு உண்டாகியுள்ள மாற்றங்களைப் பார்த்து வாய் பிளக்கிறார்கள். 2012க்குள் பத்து புதிய விமான நிலையங்களை சீனா உருவாக்கிக் கொள்ள இருக்கிறது.

இனியும் உழைப்பாளர்களுக்கான கூலியைக் குறைக்க முடியாது என்ற நிலை வந்ததும், பல பிரம்மாண்டமான இயந்திரங்களை சீனத் தொழிற்சாலைகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன.

“ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று கூறுகிறார் சீனப் பிரதமர் லீ கெகியாங். (சுருக்கமாக `லீ’). இந்த ஆண்டு மார்ச் 2 அன்று லஞ்சம் வாங்கியதற்காக தண்டனை அளிக்கப்பட்ட 14 ராணுவத் தளபதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது சீனா. (என்றாலும் ராணுவ பட்ஜெட்டை 10 சதவீதம் உயர்த்தியிருக்கிறது).

தேசப்பற்று கொண்ட இந்தியர்களுக்கு சீனாவைப் பற்றிய ஒரு பிம்பம் உண்டு. அராஜக நாடு. பேராசை கொண்ட நாடு.

அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீலக் கொள்கைகளுக்கு தலையாட்டியபடியே இந்தியாவின் முதுகில் குத்திய நாடு சீனா. நம் எல்லைப் பகுதிகளில் சிலவற்றை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உரியதல்ல என்று வேறு சொல்கிறது.

எனவே இந்தத் தொடரில் சீனாவின் சில பெருமைகளை விளக்கும்போது நெருடல் ஏற்படுவது இயல்பு. என்றாலும் `அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை’ என்ற கோணத்திலும் இவற்றை அறிய வேண்டியது அவசியம்.

இன்று எப்படியோ, சீனர்கள் கால காலமாக வெள்ளைக் கொடியை நம்பியவர் கள். அமைதி விரும்பிகள். அதே சமயம் தங்கள் நாட்டைப் பற்றி எக்கச்சக்க பெருமை கொண்டவர்கள். `சேனா குவோ’ என்று தங்கள் நாட்டை அழைத்துக் கொண்டார்கள். இதற்குப் பொருள் `நடுநாயக சாம்ராஜ்யம்’ என்று அர்த்தம். பிற நாட்டினரை எல்லாம் (முக்கியமாக அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும்) `சரியான காட்டுமிராண்டிகள்’ என்றுதான் குறிப்பிட்டார்கள்.

சமாதானத்தை அப்படி விரும்பினார்கள். வாழையடி வாழையாக வந்த அவர்களது நால்வகைப் பிரிவுகள் இவைதான். அறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள். கவனித்தீர்களா? க்ஷத்ரியர்கள் அல்லது போர் வீரர்கள் என்று ஒரு பிரிவு கிடையாது.

வேறு எந்த விதத்திலும் பிழைக்க வழியில்லை என்றால்தான் ராணுவத்தில் சேருவது அன்றைய சீனர்களின் வழக்கம்.

பின் எப்படி இப்போது தலைகீழ் மாற்றம்? சீன வரலாற்றில் திகைப்புகளுக்கும், அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x