Published : 13 Feb 2015 06:26 PM
Last Updated : 13 Feb 2015 06:26 PM
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா வியாழன் இரவு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த பேச்சின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா இதுவரை மதிப்பு அளிக்கவில்லை. இப்படியான நிலையில் ஐ.நா. கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் இடம்பெறுவதை ஏற்க முடியாது, காஷ்மீர் மக்களுக்கு சுயஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பதையும் இந்தியா நிறைவேற்றாமல் உள்ளது.
இதனால் ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் தகுதி இந்தியாவுக்கு இல்லை" என்று ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இடம்பெறுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்ற பின்னர் அமெரிக்கா இதற்கான ஆதரவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT