Published : 24 Jan 2015 08:54 PM
Last Updated : 24 Jan 2015 08:54 PM
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றுநாள் இந்தியப் பயணத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா புறப்பட்டார்.
இப்பயணத்தின்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பில் இரு நாடுகளும் முன்னேற்றம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து 'ஏர்போர்ஸ் ஒன்' எனப்படும் அதிபருக்கான வெளிநாட்டுப் பயண விமானத்தில் ஒபாமா புறப்பட்டார். அதிபருடன் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கணிசமான பிரநிதிகள் குழு, அமெரிக்காவின் முதன் பெண்மணி மிச்சேல் ஒபாமா ஆகியோரும் வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஒபாமா இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிபரின் விமானம், ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டெய்ன் நகரில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு டெல்லி பாலம் விமான நிலையத்தை ஞாயிறு காலை 10 மணிக்கு வந்தடையும். அதிபருக்கு இது இரண்டாவது இந்தியப் பயணம். இதில், அமைச்சரவையின் பல்வேறு உறுப்பினர்கள், செல்வாக்கு மிக்க தொழில்துறை தலைவர்கள், அமெரிக்க மந்திரிகள், மற்றும் பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் நான்சி பெலோசி ஆகியோரும் உடன் வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஞாயிறன்று உற்சாக வரவேற்பை காலை 12 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் அளிக்க உள்ளனர். அதன்பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்று ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் மரம்நடுவிழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
மோடியுடன் ஒபாமா மதிய உணவு அருந்துகிறார். அப்போது இந்தியப் பிரதமருடன் ஒரு 'வாக் அன்ட் டாக்' உரையாடலிலும் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது.
இரு தலைவர்களும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஐடிசி மௌரியா ஓட்டலில் ஒபாமா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கு விருந்தளிக்கிறார்.
ஜனவரி 26 அன்று ஒபாமா தனது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் இந்திய குடியரசு தினக் கொண்டாடங்களில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனில் தரும் விருந்தை ஏற்றுக்கொள்கிறார். மதியத்திற்குப் பிறகு ஒபாமா வம் மோடியும் அமெரிக்க-இந்திய வர்த்தக மாநாட்டில் நடைபெறும் தலைமை நிர்வாகிகளின் வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஜனவரி 27 அன்று அமெரிக்க அதிபர் புதுதில்லி சிறி ஃபோர்ட் அரங்கத்தில் உரையாற்றுகிறார். பின்னர் சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறார். இதனால் தாஜ்மகாலைப் பார்வையிட ஆக்ரா செல்ல இருந்த அவரது பயணத்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT