Last Updated : 15 Dec, 2014 12:09 PM

 

Published : 15 Dec 2014 12:09 PM
Last Updated : 15 Dec 2014 12:09 PM

பொய் சாட்சியத்தால் 27 ஆண்டு சிறைவாசம்!

போலீஸார் மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 12 வயதுச் சிறுவன் சொன்ன பொய் சாட்சியத்தால், கொலை வழக்கில் சிக்கி இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்தவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று உலகமறிய அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் நடந்தது இந்த உணர்ச்சிகரமான நிகழ்ச்சி.

1975-ம் ஆண்டில் ஒரு நாள், ஹரால்ட் பிராங்க்ஸ் என்பவரை 2 பேர் அமிலத்தை வீசி தாக்கினர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியாலும் சுட்டார். இந்தத் தாக்குதல் முடிந்த பிறகு அந்த 2 பேரையும் மூன்றாமவர் காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பவைத்தார். அதற்குப் பிறகு ஹரால்ட் பிராங்க்ஸ் இறந்துவிட்டார். போலீஸார் இந்தக் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

சிறுவன்தான் முக்கிய சாட்சி

ஹரால்டை தாக்கியதாகவும் கொன்றதாகவும் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத்தரப்பின் முக்கிய சாட்சி 12 வயதுச் சிறுவன் எட்டி வெர்னான். சம்பவத்தை ‘நேரில் பார்த்த’ அவனுடைய சாட்சியத்தின் பேரில் ரோனி பிரிட்ஜ்மேன் (17) அவனுடைய அண்ணன் வைலி பிரிட்ஜ்மேன் (20), ரிக்கி ஜாக்சன் (19) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 3 பேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 27 வருட சிறைவாசத்துக்குப் பிறகு 2003-ல் ரோனி பிரிட்ஜ்மேன் ஜாமீனில் விடுதலையானார். அவருக்கு இப்போது பெயர் க்வாமி அஜாமு.

பத்திரிகையின் புலனாய்வு

இந்தச் சம்பவத்தை 2011-ல் ‘சீன்’ என்ற அமெரிக்கப் பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சன் மீண்டும் புலனாய்வு செய்தார். அவர் கண்டுபிடித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தன. உடனே, ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த, ‘அப்பாவிகளுக்கு உதவும் வழக்கறிஞர்கள் குழு’, இந்த வழக்கை மீண்டும் நடத்தியது.

கடந்த மாதம் (2014 – நவம்பர்) எட்டி வெர்னான் தன்னுடைய சாட்சியத்தைத் திருத்த விரும்புவதாக அறிவித்தார். சம்பவம் நடந்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அந்தத் தாக்குதலைப் பார்க்கவே இல்லை என்றும், அப்போது பஸ்ஸில் போய்க்கொண்டிருந்ததாகவும் போலீஸாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததால் சாட்சி சொல்ல முன்வந்ததாகவும் தெரிவித்தார். அந்த மூவரின் பெயரை போலீஸாரிடம் தெரிவித்தது தான்தான் என்றும், பதிலுக்கு வழக்கு விவரங்களைப் போலீஸார் தன்னிடம் கூறி, நீதிமன்றத்தில் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததாகவும் கூறினார்.

“இப்போதுதான் நான் சரியான செயலைச் செய்திருக்கிறேன், போலீஸ் அதிகாரிகளை மீண்டும் அணுகி எல்லா உண்மைகளையும் கூறினேன்” என்கிறார் வெர்னான்.

ரிக்கி ஜாக்சன் விடுதலை

கடந்த மாதம் ரிக்கி ஜாக்சனை இந்த வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார். “இந்த வழக்கு முடிந்துவிட்டது, நான் விடுதலையாகிவிட்டேன் என்பதை நம்பவே முடியவில்லையே” என்று ரிக்கி ஜாக்சன் நீதிமன்றத்தில் கதறியழுதார். அவர் 39 ஆண்டுகள் சிறையில் இருந்தார். நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலையான கைதிகளில், அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர்தான் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வைலி பிரிட்ஜ்மேனும் கடந்த நவம்பர் 21-ல் விடுதலை செய்யப்பட்டார். அவரை, ஜாமீனில் ஏற்கெனவே விடுதலையாகியிருந்த தம்பி ரோனி பிரிட்ஜ்மேன் கட்டித்தழுவி வரவேற்றார்.

ஜாக்சன் விடுதலையான 2 மணி நேரத்துக்கெல்லாம் வைலி பிரிட்ஜ்மேன் விடுதலையாகியிருந்தார். “சிறையில் இருந்த மூவரும் 41 லட்சம் டாலர்களை, அனாவசியமாக சிறையில் வைக்கப்பட்டதற்காக அரசிடமிருந்து இழப்பீடாகக் கோரலாம். அவர்கள் அப்படி மனுச் செய்தால் அதை எதிர்த்து நாங்கள் வழக்காட மாட்டோம், நஷ்ட ஈடு பெற உதவுவோம்” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர். “படுமோசமான அநியாயத் தீர்ப்பினால் மூவருடைய வாழ்க்கையுமே பாழாகிவிட்டது” என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேரி மெக்ராத் அனுதாபம் தெரிவித்தார்.

கொள்ளைபோய்விட்டது

“எங்களுடைய இளமை, வாழ்க்கை, மகிழ்ச்சி எல்லாமே கொள்ளைபோய்விட்டது” என்று சோகம் கொப்பளிக்கக் கூறினார் ரோனி பிரிட்ஜ்மேன். “என்னுடைய அண்ணன் இறந்த பிறகு எங்கள் குடும்பத்தில் இன்னொரு ஆண் இருக்கமாட்டார். நானும் என்னுடைய உடல்நிலை காரணமாக வாரிசே இல்லாமல் போய்விடுவேன். இன்னொரு ரோனி பிரிட்ஜ்மேனுக்கு வாய்ப்பே இல்லை” என்று வாய்விட்டு அழுதார் அவர். இந்த வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வந்ததற்காக ‘சீன்’ பத்திரிகையின் நிருபர் கைல் ஸ்வென்சனை மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

“இந்த வழக்கில் எங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்த எட்டி என்கிற எட்வர்ட் வெர்னானை (வயது 52) பார்க்க விரும்புகிறேன். எட்வர்டுக்கு எங்கள் மீது பகைமையோ, பொறாமையோ இருந்திருக்க முடியாது. கள்ளமறியாச் சிறுவன், போலீஸாரிடம் நல்ல பெயர் வாங்க பொய் சொல்லிவிட்டான். அவன் மீது எங்களுக்குக் கோபம் இல்லை என்பதை அவனைச் சந்திக்கும்போது கூறுவேன்” என்றார் பிரிட்ஜ்மேன்.

எட்வர்டின் மன உளைச்சல்

சீன் பத்திரிகையில் 2011-ம் ஆண்டு இந்த சம்பவம் குறித்த கட்டுரை வெளியானதற்குப் பிறகு எட்வர்ட் வெர்னானிடம் மாற்றம் தெரிந்தது. அவர் தினமும் பூசைக்குப் போகும் தேவாலயத்தின் பங்குத் தந்தை சங்கைக்குரிய அந்தோனி சிங்கிள்டன் இதைக் கவனித்தார். 2013-ல் வெர்னானின் உடல் நலிவுற ஆரம்பித்தது. மருத்துவமனையில் இருந்தபடியே பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கோரி, தான் செய்த தவறை அறிக்கையிட்டார். குரல் உடைந்து அவ்வப்போது நா தழுதழுத்தது. கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. வார்த்தைகள் தடுமாறி தடுமாறி வந்தன. அந்தப் பாவ அறிக்கையையே எழுத்துப்பூர்வமாகவும் பிறகு அளித்தார்.

ரோனியின் பெருந்தன்மை

“இனி பழைய கதையைப் பேசி பயனில்லை. 40 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. இனி அடுத்த பிரிட்ஜ்மேன், வைலி பிரிட்ஜ்மேன், ரிக்கி ஜாக்சனுக்காக நாம் காத்திருக்கக் கூடாது. குற்றவியல் நடைமுறைச் சட்ட அமலில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். இனி எஞ்சியிருக்கிற காலத்தில் பிறருடன் சமாதானமாகவும் அன்போடும் வாழ்வதைப்பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்” என்றார் ரோனி பிரிட்ஜ்மேன் என்கிற அஜாமு.

‘ரோனி பிரிட்ஜ்மேன் நிரபராதி’ என்று தீர்ப்பளித்த பெண் நீதிபதி, தீர்ப்பை வாசித்துவிட்டு ரோனியிடம் வந்து அவரை மெல்ல அணைத்து முதுகில் தட்டி ஆறுதல் கூறினார். அவருடைய அந்தச் செயலால் மனம் நெகிழ்ந்த ரோனி கண்ணீர் பெருக்கினார்.

தி வாஷிங்டன் போஸ்ட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x